Skip to main content

“ஆட்சியை விமர்சிப்பவர்களின் குரல்களை ஒடுக்குவதற்காகத் தான்  இந்த விதிகளை வரையறுத்துள்ளனர்..” திருமாவளவன் கண்டனம் 

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

thirumavalavan


மத்திய அரசு புதிதாக தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 எனு சட்டவரைவை வகுத்துள்ளது. இதில் மத்திய அரசு, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் தனி நபர் தரவுகளை அரசு எப்போது கேட்கிறதோ அப்போது உடனடியாக தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல், அரசு சுட்டிக்காட்டுகிற பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதனைக் கண்டித்து விசிக நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

 

அந்த அறிக்கையில், “தகவல் தொழில்நுட்ப விதிகள் என்ற பெயரில் சமூக ஊடக நிறுவனங்களை மிரட்டி அவற்றைப் பயன்படுத்தும் குடிமக்களின் அந்தரங்கத் தரவுகளை கண்காணிக்க முயற்சிக்கும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

பாஜக அரசு வகுத்துள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் -2021, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தரவுகளை அளிக்குமாறு அரசாங்கம் கோரினால் அவற்றைத் தொடர்புடைய நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டுமென்றும்; அரசாங்கம் சுட்டிக்காட்டுகிற பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டுமென்றும்;  இவற்றைச் செய்வதற்கு பொறுப்புள்ள அலுவலர்களை நியமிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. இதற்கு ஒப்புக் கொள்ளாத சமூக ஊடக நிறுவனங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. இது தனிமனித கருத்துரிமையைப் பறிக்கும் அடாவடி செயலாகும். அத்துடன், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

 

இந்நிலையில், இந்த விதிகள் பொதுமக்களின் அந்தரங்கத்தைப் பாதிக்கின்றது என்றும், இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும் ‘வாட்ஸ்அப்’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இப்போது வழக்கு தொடுத்து இருக்கிறது.

 

சமூக ஊடகங்கள் மூலமாக வன்முறையைத் தூண்டுவது, ஆபாச செய்திகளைப் பரப்புவது, வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீய செயல்களைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்று மோடி அரசு கூறியிருப்பது வரவேற்கக் கூடியதே. எனினும், தமது ஆட்சியை விமர்சிப்பவர்களின் குரல்களை ஒடுக்குவதற்காகத் தான்  இந்த விதிகளை வரையறுத்துள்ளனர் என்பதே உண்மையாகும். இதனை மோடி அரசின் கடந்த கால நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. குறிப்பாக, அண்மையில் ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக பாஜக அரசு எடுத்து வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் இதனை நமக்கு உறுதிப்படுத்துகின்றன.

 

குடிமக்களின் தனிப்பட்டத் தரவுகளை விலைக்கு விற்று அதன் மூலம் அரசுக்குப் பணம் ஈட்டப் போகிறோம் என்று நாடாளுமன்றத்திலேயே அறிவித்த ஆட்சிதான் பாஜக ஆட்சி. குடிமக்களின் அந்தரங்கங்கம் குறித்த உரிமை மீது கொஞ்சமும் மதிப்பே இல்லாத இந்த அரசு, சமூக ஊடகங்கள் குடிமக்களின் தனி மனித உரிமைகளை மீறுகின்றன என்று நீலிக்கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

 

இந்தியாவில் செயல்பட்டு வரும் பெரும்பாலான அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் பாஜக அரசின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அதன் ஊதுகுழல்களாக மாறிவிட்ட சூழலில், சமூக ஊடகங்கள்தான் பெரும்பாலும் குடிமக்கள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த வாய்ப்பளித்து வருகின்றன.

 

சமூக ஊடகங்களில் இலட்சக்கணக்கான போலி கணக்குகளை உருவாக்கியும், அவற்றின் மூலமாகப் பொய் செய்திகளை பரப்பியும்,  வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டும்  வருகின்ற சங்கப் பரிவார அமைப்பினர்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு அவர்களை ஆதரித்தும் வருகிற பாஜக அரசு, வன்முறை பிரச்சாரத்தையும்,  வெறுப்புப் பிரச்சாரத்தையும்  தடுப்பதுதான் எங்கள் நோக்கம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

 

சமூக ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் ஒட்டுமொத்தமான ஒரு "கண்காணிப்பு சாம்ராச்சியத்தை"  உருவாக்குவதே அவர்களின் நோக்கம். குடிமக்களைக் கண்காணிப்பதே  சர்வாதிகாரிகளின் நடைமுறை. அதைத்தான்  பாஜக அரசும் செய்ய முயற்சிக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகள்மீது நம்பிக்கை கொண்ட, ஜனநாயகத்தை நேசிக்கிற எவரும் இதை ஆதரிக்க முடியாது.

 

எனவே, பாஜக அரசின் இந்த  சட்டவிரோத - வெகுமக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுக்க முன்வருமாறு ஜனநாயக சக்திகள் யாவருக்கும் அறைகூவல் விடுக்கிறோம். அத்துடன், பாஜக அரசு உடனடியாக சமூக ஊடகங்கள் தொடர்பாக வரையறுத்துள்ள விதிமுறைகளைக் கைவிட வேண்டுமெனவும்  தமது சர்வாதிகாரப் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டுமெனவும்  வலியுறுத்துகிறோம்” என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“திமுகதான் எதிர்க்கட்சி என்பதுபோல் மோடி பிரச்சாரம் செய்கிறார் - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Thirumavalavan alleges Modi is campaigning as if the DMK is the opposition

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாய்க் கிழமை(16.4.2024) சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பு.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்களிடம் திருமாவளவன் பேசுகையில், “இந்தத் தேர்தலில், நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை  ஒருங்கிணைத்து  இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுகதான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். கேஸ் விலை உயர்வு மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம். மோடி  மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  ரேசன் கடை இருக்காது. 100-நாள் வேலைத்திட்டம் இருக்காது” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன்,  திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.