Skip to main content

"எப்படி தமிழ்நாடு முழுக்க ஜெயிக்க முடியும். யார் ஓட்டுப் போடுவார்" - புகழேந்தி விளாசல்

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

"Tamil Nadu DMK will win as a whole like West Bengal." - Pukhalendi

 

தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தியைச் சந்தித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம் அவர் அளித்த பதில்களின் சுருக்க வடிவம்.

 

“மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 90% இடங்களை திமுக கைப்பற்றும். மிகவும் கடினமாகப் போவது கோயம்புத்தூர். ஆனால், அங்கேயும் திமுக மாநகராட்சியைப் பிடித்துவிடும். மேற்குவங்கத்தில் மம்தா உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக வென்றார். அதேபோல், மாபெரும் வெற்றியை திமுக பெரும். இதனை மக்கள் மட்டும் தரப்போவதில்லை; மாமன்னர்கள் ஓ.பி.எஸும், இ.பி.எஸும் சேர்ந்தே இதனைத் தரப்போகிறார்கள். காரணம் பாஜகவுடனான கூட்டணி முறிவு பற்றித் தெளிவாகக் கூறாததே. பல இடங்களில் பாஜகவினர், அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்றே வாக்கு கேட்கின்றனர். ஓட்டே இல்லாத பாஜக ஒரு 50, 100 வாக்குகளை வாங்கினால் அது அவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அதனைப் பெறுவதற்கு ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். துணை நிற்கிறார்கள். 

 

தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆர். பற்றிப் பேசுவார்கள் அவ்வளவுதான். இவர்களுக்கு உண்மையாக எம்.ஜி.ஆர். பற்றித் தெரியாது. ஒருவர் எம்.ஜி.ஆர். வேஷம் போட்டுக்கொண்டு எடப்பாடி காலில் விழுகிறார். அவர் (எடப்பாடி) என்ன செய்திருக்க வேண்டும். ‘நீ எம்.ஜி.ஆர். வேஷம் போட்டிருக்க; காலில் விழக்கூடாது’ எனச் சொல்லித் தூக்கிவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் செய்யவில்லையே. 

 

அதிமுக தேர்தலில் தோற்கவேண்டும் எனச் சொல்லவில்லை. பாஜகவிடம் அடமானம் வைத்ததால் அந்த நிலை வரப்போகிறது என்கிறேன். தேர்தல் முடிந்ததும் கூட்டணி தொடரும் என்கிறார்கள். அதனால், பாஜக அதைச் சொல்லியே வாக்கு கேட்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அந்த இரட்டைத் தலைமைதான். அந்த இரட்டைத் தலைமை ஒழிந்துவிட்டால் அதிமுக மீண்டுவிடும். அதற்கு சாதாரண ஒரு தொண்டன் போதும். 

 

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தற்போது மு.க.ஸ்டாலின் ஆகியோரை முதலமைச்சராகப் பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு. இது 50 வருடத் தொடர்ச்சி. இது அப்படியே நீடிக்க வேண்டும் என்றால் அதிமுக வலுப்பெற வேண்டும். அதைவிடுத்து பாஜகவை நிலை நிறுத்தினால்; சிறுபான்மையினரோ, தாழ்த்தப்பட்டோரா ஒரு ஓட்டுப் போடப்போவதில்லை. பிறகு எப்படி தமிழ்நாடு முழுக்க ஜெயிக்க முடியும். யார் ஓட்டுப் போடுவார். 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவுதான் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் முடிவும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.