Skip to main content

“எம்.ஜி.ஆர்-க்கு ஸ்டாலின் மரியாதை செய்கிறார்.. இ.பி.எஸ். அவமானப்படுத்துகிறார்..” - கொதிக்கும் புகழேந்தி

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

"Stalin pays homage to MGR. Edappadi palanisamy Insults. ”- Pukahendi

 

சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் முன்னாள் தமிழக முதல்வர் பழனிச்சாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி 27 அமாவாசைக்குள் மாறும் எனக் கூறுகிறார். சினிமா படம் தான் நினைவுக்கு வருகிறது. அமாவாசை என்றால் பழனிசாமிக்குத் தான் மிகவும் பொருந்தும். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி எதிர்த்து நின்றபோது, இன்றைய முதல்வர் ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைக் கவிழ்த்திருக்கலாம். ஆனால், அதனை விரும்பவில்லை. தேர்தல் மூலம் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்போம் எனக்கூறித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளார். இதனை மறந்து மக்களை திசைதிருப்ப, அமாவாசை கதைபேசும் அமாவாசை பழனிசாமிக்கு கண்டனம்.

 

மேற்கு வங்கம்போல் சட்டசபையை முடக்குவோம் எனக் கூறுவது பழனிசாமி சர்வாதிகார பேச்சைக் காட்டுகிறது. தமிழக ஆளுநர் என்ன தலையாட்டி பொம்மையா? இவருக்கு சட்டமன்றத்தை முடக்கப் போவதாக எப்போது கூறினார் புரியவில்லை. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் சொல்லி வரும் ஒரே நாடு, ஒரே தேர்தல், என்பது சாத்தியமில்லை, ஒரே ஜெயில் என்பது தான் சாத்தியமான ஒன்று.

 

தேர்தல் பரப்புரையில் இதுவரை ஒ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் நகர்ப்புற உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன சேவை செய்ய போகிறோம் எனச் சொன்னது உண்டா. 2021 உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் எனத் தீர்மானம் நிறைவேற்றியது என்ன ஆயிற்று.

 

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி இல்லை. தேசிய முற்போக்கு கூட்டணி தொடர்கிறது. தேர்தல்களில் கூட்டணி உண்டு என பாஜக தலைவர் அண்ணாமலையும், பழனிசாமியும் கூறுவது அ.தி.மு.க. அடிமை சாசனத்தை உறுதி செய்கிறது. 

 

பழனிசாமி, 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக, கோடிக் கணக்கில் பல வகைகளில் செலவு செய்தார். உள்ளாட்சித் தேர்தல் போட்டியிடும் சாதாரண அடிமட்ட தொண்டருக்குச் செலவு செய்யாதது ஏன்? தி.மு.க. அரசு மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும், மக்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஒரே வெறுப்பு தான் பழனிசாமி உள்ளிட்ட ஊழல்வாதிகளை இன்னும் கைது செய்யவில்லை என்கிற அதிருப்திதான் உள்ளது.

 

அனுதினமும் நாங்கள் போற்றி புகழ்பாடி வணங்கும் எம்.ஜி.ஆர் உருவத்தில் தெரிந்த ஒருவர், எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்ததை எடப்பாடி பழனிசாமி வரவேற்பது எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தும் செயல் அல்லவா. அதே நேரத்தில் தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின், எம்.ஜி.ஆர் பிறந்தநாளை அரசு விழாவாக எடுத்துள்ளார். மறைந்த நாவலருக்குச் சிலை கண்டுள்ளார். அம்மா கேண்டீன் தொடர உத்தரவிட்டுள்ளார். நீட் விஷயத்தில் அம்மாவை காட்டி எதிர்ப்பை பாராட்டிப் பேசி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவை அவமானப்படுத்தி வருகிறார்” என்று பேசினார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.