Skip to main content

வாக்களிப்பதை கவுரவமாக கருதும் நாளே உண்மையான ஜனநாயகம் மலரும் நாள்! ராமதாஸ்

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

 

தேர்தலில் வாக்களிப்பதை சுமையாக கருதாமல் கவுரவமாக நினைக்கும் நிலை உருவாக வேண்டும். அந்த நாள் தான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும் நாளாக அமையும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 38 தொகுதிகளிலும் சராசரியாக 71.90 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒப்பீட்டளவில் இது மனநிறைவளிக்கும் எண்ணிக்கை தான் என்றாலும் கூட, நான்கில் ஒரு பங்குக்கும் கூடுதலான வாக்காளர்கள் தங்களின் விலைமதிப்பற்ற வாக்குரிமையை செலுத்தத் தவறியதை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாக பார்க்க முடியவில்லை.


 

Ramadoss



தமிழகத்தில் மொத்தமுள்ள 38 தொகுதிகளில் தருமபுரி, நாமக்கல், கரூர், சிதம்பரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், பெரம்பலூர், ஆரணி, கள்ளக்குறிச்சி, அரக்கோணம், தேனி, விழுப்புரம், சேலம், திண்டுக்கல், கடலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 23 தொகுதிகளில் சராசரிக்கும் கூடுதலாக, அதாவது 71.90%-க்கும் கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளன. ஊரகப் பகுதிகளை அதிகம் கொண்ட இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகமாக இருப்பது கிராமப்புற மக்களிடம் வாக்களிக்கும் ஆர்வமும், துடிப்பும் அதிகமாக இருப்பதை உறுதி செய்கிறது. 

 

அதேநேரத்தில் வாக்குப்பதிவு மிகவும் குறைவாக உள்ள தொகுதிகள் பட்டியலில் தென் சென்னை, மத்திய சென்னை, திருப்பெரும்புதூர், வட சென்னை ஆகிய தொகுதிகள் முன்னணியில் உள்ளன. இவற்றில் தென் சென்னையிலும், மத்திய சென்னையிலும் முறையே 56.34%, 58.69% என்ற அளவில் தான் வாக்குகள் பதிவாகியுள்ளன. இவை பாதிக்கும் சற்று அதிகம் என்பதிலிருந்தே கிட்டத்தட்ட பாதி வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையாற்றவில்லை என்பதை உணரலாம். திருப்பெரும்புதூர், வட சென்னை ஆகியவை 60 விழுக்காட்டைத் தட்டுத்தடுமாறி கடந்துள்ளன. இவை அனைத்தும் சென்னை பெருநகர எல்லைக்குள் உள்ள தொகுதிகளாகும். அதேபோல், கோவை (63.00%), மதுரை (65.83%) ஆகிய மாநகரத் தொகுதிகளிலும்,  குறைந்த  வாக்குகள் பதிவாகியிருப்பது பெருமைப்படக்கூடிய விஷயமல்ல.

 

இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரியாகத் தான் வரி வசூலிக்கப்படுகிறது. அதேநேரத்தில் குடிநீர், சாலைகள், மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகளைப் பார்க்கும் போது ஊரகப் பகுதிகளை விட நகர்ப்புற பகுதிகளுக்குத் தான் அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்கப் படுகிறது. வசதிகளை அனுபவிக்காத ஊரக மக்கள் அதிக அளவில் வாக்களிக்கும் போது, அதிநவீன வசதிகளை அனுபவிக்கும் நகர்ப்புறவாசிகளில் பெரும்பான்மையினர் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாததும், தேர்தல் காலத்தில் கிடைக்கும் விடுமுறையை பயன்படுத்திக்கொண்டு சுற்றுலா உள்ளிட்ட கொண்டாட்டங்களை அனுபவிப்பதும் சரியா? என்பதை அவர்களின் மனசாட்சி தான் தீர்மானிக்க வேண்டும்.
 

தேர்தலில் வாக்களிக்காதவர்கள் தங்களின் செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது. ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்தும், மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்தும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் புரட்சியாளர்கள், வெயிலுக்குக் கூட வாக்குச்சாவடி பக்கம் ஒதுங்காதது தான் முரண்பாடுகளின் உச்சம் ஆகும். எந்த அரசியல் கட்சியையும்  தங்களுக்குப் பிடிக்கவில்லை; அதனால் தான் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி அவர்கள் தப்பித்துக்கொள்ள முயலலாம். ஆனால், அது சரியான பதில் இல்லை என்பதை அவர்களே அறிவார்கள். 
 

அரசியல் கட்சிகளிலும், வேட்பாளர்களிலும்  ஒருவரைக் கூட பிடிக்கவில்லை என்பது தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் செயல் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. ஒருவேளை அவர்களை எந்தக் கட்சியும், எந்த வேட்பாளரும் கவரவில்லை என்றாலும் கூட, அதை வெளிப்படுத்துவதற்காகவே ‘நோட்டா’ என்ற புதிய வாய்ப்பு உள்ளது. அதைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு என்ன தயக்கமோ?
 

மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி ஆகும். மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியை 100% மக்களும் இணைந்து தேர்ந்தெடுக்காவிட்டால் அது முழுமையான ஜனநாயகமாக  இருக்காது. ஜனநாயகம் நமக்கு அளித்திருக்கும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கும் நாம், இன்னும் கூடுதலான உரிமைகளைக் கோரும் நாம் வாக்குகளை செலுத்துவதற்கு மட்டும் மறுப்பது மிகப்பெரிய கடமை தவறுதலாகவே பார்க்கப்பட வேண்டும். 100 வயதைக் கடந்த மூத்த குடிமக்களும், நகரவே முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளும் அடுத்தவர்களின் உதவியுடன் சென்று வாக்களிக்கும் போது, நாம் வாக்களிக்காமல் இருந்தது சரியா? என்ற வினாவை இந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொண்டால், தாங்கள் செய்தது மன்னிக்க முடியாத ஜனநாயகக் குற்றம் என்ற உண்மை அவர்களுக்கு புரியும். அது அவர்களை மாற்ற வேண்டும்.
 

இந்தியாவில் மட்டும் தான் இந்த நிலைமை என்றில்லை... உலகின் பல நாடுகளில் இதே நிலைமை தான் காணப்படுகிறது. உலகின் வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்காவில் 1968-ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று வரையிலான 50 ஆண்டுகளில் நடந்த அனைத்து அதிபர் தேர்தல்களிலும் 60%க்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இங்கிலாந்தில் 1950-களில் 85% ஆக இருந்த சராசரி வாக்குப்பதிவு இப்போது 65% ஆக குறைந்து விட்டது. அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவில் அனைத்து தேர்தல்களிலும் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான வாக்குகள் பதிவாகின்றன. இதற்குக் காரணம் அங்கு தேர்தலில் வாக்களிக்கத் தவறுவது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டு, 20 ஆஸ்திரேலிய டாலர் அபராதம், அரசு வேலைவாய்ப்பு மறுப்பு உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுவது தான்.
 

வாக்களிக்கத் தவறுவது குற்றம் என்ற சட்டம் 1777-ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் ஜார்ஜியா மாகானத்தில் நடைமுறைக்கு வந்து விட்டது. உலகில் 11 ஜனநாயக நாடுகள் உட்பட மொத்தம் 38 நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் வாக்களிக்கத் தவறுவது  குற்றமாக கருதப்பட்டு, பல வகைகளில் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. அதேபோல், இந்தியாவிலும்  வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம் பெயர்ந்து வாழும் இந்தியா போன்ற நாட்டில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை என்ற குரல்கள் எழுகின்றன. அதில் ஓரளவு உண்மை இருந்தாலும்,  நாட்டின் எந்தப் பகுதியிலும் வாக்களிக்கலாம் என்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் இதை சாத்தியமாக்க முடியும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இம்மாற்றங்களை எளிதாக செய்ய முடியும்.



 

இந்திய ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அதற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளில் வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம். இத்தகைய சூழலில் இந்தியாவில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது குறித்த பொது விவாதத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும். அதேநேரத்தில் தேர்தலில் வாக்களிப்பதை சுமையாக கருதாமல் கவுரவமாக நினைக்கும்  நிலை உருவாக வேண்டும். அந்த நாள் தான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும் நாளாக அமையும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.