
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் மனுவும், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையினரின் மனுவும் இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி பதவி வகித்து வந்த மின்சாரத்துறை தற்பொழுது நிதித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தங்கம் தென்னரசுவிற்கு கூடுதல் துறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையைத் தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியது. அந்த பரிந்துரை முதலில் புறக்கணிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் இருந்து பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவில் முதலமைச்சர் பரிந்துரையின் படி செந்தில் பாலாஜி வகித்து வந்த இரு துறைகள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அமைச்சராகத் தொடர ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை காரணமாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு மின்சாரத் துறையும், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் வழங்கப்படுகிறது; செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.