Skip to main content

‘இந்த இரண்டு தொகுதிகளும் எனது இரண்டு கண்கள்’ - செந்தில்பாலாஜி

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

Senthil Balaji contest in karur and he explained why he has changed

 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றுள்ளது. எதிர்க்கட்சியாக அதிமுக சட்டமன்றத்தில் நுழைகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சியினர் நம்பியிருந்த நிலையில், 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

 

இந்தத் தேர்தலில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் உள்ள மொத்த தொகுதிகளையும் கைப்பற்றியது. கரூரில், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது. திமுக வேட்பாளர்கள் சிலரின் தேர்தல் முடிவுகளை தமிழகம் மிகவும் எதிர்பார்த்திருந்தது. அதில் ஒன்று, கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியின் தேர்தல் முடிவுகள். 

 

செந்தில் பாலாஜி, 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுகவில் பிரிவுகள் ஏற்பட்டு இ.பி.எஸ். பிரிவு, ஓ.பி.எஸ். பிரிவு, தினகரன் பிரிவு என செயல்பட்டது. அதில் செந்தில்பாலாஜி, தினகரன் பிரிவில் இருந்தார். அப்போது தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தமிழக முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி உட்பட அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தினகரன் அணியிலிருந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்திருந்தார். அவருக்கு அந்த இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட திமுக வாய்ப்பு அளித்தது. அவரும் அத்தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றார். 

 

அதன்பிறகு தற்போது நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த சமயத்தில், அவர் ஏன் தொகுதி மாறி போட்டியிடுகிறார் என பல்வேறு தரப்புகளிலிருந்தும் கேள்விகள் எழுந்தன. ஆனால் அவர், தேர்தல் பிரச்சாரத்தின்போதும், நக்கீரனுக்கு அளித்தப் பேட்டிகளிலும், “அரவக்குறிச்சியும் கரூர் மாவட்டத்தில்தான் உள்ளது; தற்போது போட்டியிடும் கரூர் தொகுதியும் கரூர் மாவட்டம்தான். இந்த இரண்டு தொகுதிகளும் எனது இரண்டு கண்கள் போன்றது” எனத் தெரிவித்திருந்தார். 

 

முன்னதாக இடைத்தேர்தலின்போதே அவர் திமுக தலைமையிடம், இடைத்தேர்தல் என்றால் அரவக்குறிச்சி, பொதுத்தேர்தல் என்றால் கரூர் என கூறி சம்மதம் வாங்கியிருந்தார். அதேபோல் தற்போது பொதுத்தேர்தலில் கரூர் தொகுதியைப் பெற்று வெற்றியும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, கரூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் நான்கு தொகுதிகளையும் வென்று திமுக தலைமையிடம் சமர்ப்பிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். அதேபோல் கரூர் மாவட்டம் முழுவதையும் வென்று திமுக தலைமையிடம் சமர்ப்பித்துள்ளார். இவரது பெயரும் அமைச்சரவை பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.