![Selvaperunthagai MLA comment on EPS](http://image.nakkheeran.in/cdn/farfuture/Js78es9TK-OMfkZU5VFK1X_ATaaW0CW8C5js8lFG1e8/1678772899/sites/default/files/inline-images/th-1_3702.jpg)
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை அதிமுகவினர் தமிழ்நாடு முழுக்கக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் சிவகங்கையில் பிறந்தநாள் விழாக் கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அந்தக் கூட்டத்தில் அவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் மிகவும் மோசமாக விமர்சித்துப் பேசினார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை நேற்று இ.பி.எஸ்.ஸை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “சிவகங்கையில் நேற்று முன்தினம் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து நாவடக்கம் இன்றி விமர்சனம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரது பேச்சு அநாகரிகத்தின் உச்சம். மேலும், அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது.
தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்வர்களில் இவ்வளவு தரம் தாழ்ந்து, அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசுபவரை தமிழ்நாடு பார்த்ததில்லை. ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு அவர் பேசும் பேச்சுகளில் கவனம் வேண்டாமா. தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருக்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு பெருகிக் கொண்டிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் நிலை குலைந்து போய், அரசியல் முதிர்ச்சியின்றி எடப்பாடி பழனிசாமி இப்படி பேசி வருகிறார். சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள், கண்ணியமான தமிழ்நாட்டின் அரசியல் நாகரிகத்திற்கு, இழுக்கு.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பேசிய தரம் குறைந்த பேச்சுக்கு, அந்த தொகுதி மக்கள் அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்து, மிக மோசமாக அவரது கட்சியினரை தோற்கடிக்க வைத்தார்கள். அதிலிருந்து அவர் பாடம் கற்றதாகத் தெரியவில்லை. இதே போன்று வரும் காலங்களில் பேசினால் அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மேலும், சொந்தக் கட்சியினரே அவரை விட்டு விலகி, அவர் அரசியல் அநாதையாகி விடுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”