Skip to main content

“எம்.ஜி.ஆர் போல் விஜய்யும் மக்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார்” - செல்லூர் ராஜூ

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Sellur Raju says Like MGR, Vijay also wants to help people

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அ.தி.மு.க, தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதற்கிடையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்தார். இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் தான் பிரதான இலக்கு என்றும், ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (18-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், த.வெ.க தலைவர் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவர் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது அவருடைய நோக்கம். தனிப்பட்ட முறையில் ஒரு இளைஞர் (விஜய்) எம்.ஜி.ஆர் போல் தான் சம்பாரித்த பணத்தை மக்களுக்கு கொடுத்து உதவ நினைக்கிறார். அவர் களத்திற்கு வந்த அவருடைய கொள்கை, செயல்பாடு உள்ளிட்டவையெல்லாம் முதலில் சொல்லட்டும். எப்போதுமே அதிமுக யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை வச்சுக்காது. அவர் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் நல்லது தான்” என்று கூறிச் சென்றார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நடிகர் விஜய்க்கு ராகுல்காந்தி நன்றி

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Rahul Gandhi thanks to actor Vijay

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி கடந்த 9ஆம் தேதி பதவியேற்றார். அதனை தொடர்ந்து 18வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (24-06-24) தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து, நேற்று மாலை இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வானதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்தார்.

தொடர்ந்து ராகுல்காந்திக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்திக்கு, நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய்யும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘காங்கிரஸ் கட்சியினராலும், அதன் கூட்டணி கட்சியினராலும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்திக்கு எனது வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துகள்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதே எக்ஸ் வலைத்தள பக்கத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்துள்ளார். 'ஒவ்வொரு இந்தியனின் குரல் ஒலிக்கும் போதும் நமது ஜனநாயகம் வலுப்பெறுகிறது. நன்றி விஜய்' என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Next Story

சிறுவன் மீது சரிந்து விழுந்த விஜய்யின் பிறந்தநாள் பேனர்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Vijay  birthday banner fell on the boy

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் விஜயபுரம் என்ற பகுதிக்கு செல்லும் வழியில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு பிறந்தநாள் விழா பேனரை அவரது ரசிகர்களான தொண்டர்கள் வைத்திருந்தனர். ஜீன் 25 ஆம் தேதி மாலையில் மழை பெய்வதற்கு முன்பாக பலத்த காற்று வீசியது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான விஜய் பிறந்த நாள் டிஜிட்டல் பேனர் காற்றின் வேகத்தில் நிற்க முடியாமல் கீழே சாய்ந்தது. டிஜிட்டல் பேனர் சாய்கின்ற போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவன் மேல் விழுந்தது.

நல்வாய்பாக பேனர் சிறுவன் மீது விழுந்த போது அதே இடத்தில் ஒரு இரு சக்கர வாகனமும் நின்று கொண்டிருந்தது. சிறுவன் மீதும் இருசக்கர வாகனத்தின் மீதும் அந்த டிஜிட்டல் பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தின் உதவியால் அந்த சிறுவனுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. டிஜிட்டல் பேனர் விழுந்ததைக் கண்ட அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அதை தூக்கி அதன் அடியில் சிக்கிக் கொண்ட சிறுவனை மீட்டனர். சிறுவன் காயங்கள் இன்றி வீட்டிற்கு சென்றான். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் தொடர்ந்து அதே இடத்தில் அகற்றப்படாமல் இருந்ததால் காற்றின் வேகத்தில் அது சாய்ந்து சிறு விபத்தை ஏற்படுத்தியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகரில் அரசியல் கட்சி பேனர் ஒன்றில் கீழே விழுந்து ஒரு இளம் பெண் மரணத்தை சந்தித்தார் அதன் பின் பேனர் வைப்பதில் சில கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்தது. டிஜிட்டல் பேனர் வைக்கப்படும் பொழுது, எந்தப்பகுதியில் வைக்கிறார்களோ அந்த பகுதியில் நகராட்சி, காவல்துறை, வருவாய் அலுவலர்களிடம் சான்றிதழ் பெற்று அதன் பின்பே வைக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை எந்த அரசியல் கட்சிகளும் தனியார் அமைப்புகளும் பின்பற்றுவதே இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.