
கோப்புப்படம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து டெல்லிக்கு விரைந்துள்ளார். எடப்பாடியைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லிக்குச் சென்றுள்ளனர். அதிமுக தலைவர்கள் அடுத்தடுத்து டெல்லிக்குப் படையெடுத்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 'டெல்லிக்கு யாரையும் சந்திக்க நான் வரவில்லை. அதிமுக அலுவலகத்தை பார்வையிட வந்துள்ளேன்' என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி. ஆனால், 'பிரத்யேக சந்திப்பு ஒன்று நடக்கவிருக்கிறது. அதற்காகத்தான் டெல்லிக்கு வந்துள்ளார் எடப்பாடி' என்று டெல்லியிலிருந்து தகவல் கிடைக்கின்றன.
இது குறித்து மேலும் நாம் விசாரித்தபோது, 'அதிமுக-பாஜக கூட்டணி வந்தாக வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் எடப்பாடியுடன் செங்கோட்டையன் முரண்பட்டதிலும், பிறகு சமாதானதுமான சம்பவத்தின் பின்னணியில் இருந்ததும் இருப்பதும் பாஜக மேலிடம் தான். இந்த நிலையில்தான், எடப்பாடியை டெல்லிக்கு வரவழைத்துள்ளனர்.
டெல்லியில் இன்று இரவு 7.30க்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். வழக்கமாக டெல்லியில் அதிமுக கொடி கட்டிக் கொண்டு செல்லும் காரை பயன்படுத்துவார் எடப்பாடி. இன்று அத்தகைய காரை தவிர்த்துவிட்டு சாதாரண காரில் சென்று அமித்ஷாவை சந்திக்கிறார். ரகசியமான சந்திப்பு என்றாலே, இது மாதிரி ஒரு பொது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொள்வதும், அதில் கலந்துகொள்ளச் செல்வது போல் சென்று விட்டு ரகசிய சந்திப்பில் கலந்து கொள்வது அரசியலில் நடக்கும் இயல்பான விஷயம் தான். அதனால், அதிமுக அலுவலக விசயமாக எடப்பாடி டெல்லிக்கு வந்திருந்தாலும், இந்த ரகசிய சந்திப்பிற்காகவே அவர் டெல்லிக்கு வந்துள்ளார்' என்கிறது டெல்லி தகவல்கள்.