Skip to main content

‘அதிமுகவை காப்பாற்ற யாரும் இல்லையா?’ - தோல்விக் குமுறலுக்கு சாத்தூரே சாம்பிள்!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

Sathur- admk rajendrabalaji and rajavarman issue

 

“பத்து வருஷத்துக்கு முன்னால சாத்தூர் தொகுதில அதிமுகவுக்கு விழுந்த வாக்கு சதவீதம் 58.32. அப்ப திமுகவுக்கு கிடைச்சது 39.07 சதவீத வாக்குகள்தான். கடந்த சட்டமன்றத் தேர்தல்ல.. இந்தத் தொகுதில திமுக கூட்டணில இருந்த மதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 38.68. அதிமுக 32.85 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்ல, மாவட்ட பஞ்சாயத்து வார்டுல திமுக 76.83 சதவீத வாக்குகளும், அதிமுக 15.54 சதவீதம் வாக்குகளும் வாங்கியிருக்கு. அதாவது, தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமியைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார் திமுக வேட்பாளர் பகவதி திருவேங்கடசாமி. உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றிபெறுவது வழக்கம்தான். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது.

 

அதே நேரத்தில், தோல்வி என்றாலும் கவுரவமான தோல்வியாகத்தானே இருந்திருக்க வேண்டும். இந்த அளவுக்கு மோசமாகவா இருக்க வேண்டும்? அதிமுகவுக்கு ஏன் இந்த வீழ்ச்சி? அதிமுக தொண்டர்கள் கடும் எரிச்சலில் இருக்காங்க. சாத்தூர் ஒரு சாம்பிள்தான்!”  எனப் புள்ளிவிவரங்களோடு பேச ஆரம்பித்தார், அந்த அதிமுக நிர்வாகி. “விருதுநகர் கிழக்கு மாவட்டத்துல தேவையில்லாத பிரச்சனை ஓடிட்டிருக்கு. விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜிக்கும் சாத்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் மொதல்ல பிரச்சனையாச்சு. ராஜவர்மன் கட்சிய விட்டுப் போனாரு.

 

Sathur- admk rajendrabalaji and rajavarman issue

 

அப்பத்தான் முன்னாள் சபாநாயகர் காளிமுத்தண்ணன் தம்பி ரவிச்சந்திரனை கிழக்கு மாவட்டச் செயலாளராக்கி, சாத்தூர்ல போட்டியிட சீட்டும் வாங்கித் தந்தாரு ராஜேந்திரபாலாஜி. சாத்தூர்ல தோற்றுப்போன சோகத்துல இருந்த ரவிச்சந்திரனுக்கு, திரும்பவும் ராஜவர்மனை ராஜேந்திரபாலாஜி கட்சிக்குள்ள கொண்டுவந்தது அறவே பிடிக்கல. என்னைக் கேட்காம ராஜவர்மனை எப்படி கட்சில சேர்க்கலாம்கிற கோபம் தலைக்கேறிருச்சு. இதப்பத்தி ராஜேந்திரபாலாஜிகிட்ட நிர்வாகிகள் சொன்னப்ப..  ‘முன்னாள் எம்.எல்.ஏ. ஒருத்தரு திரும்பவும் கட்சிக்கு வர்றாருன்னா அது கட்சிக்குப் பலம்தானே? தலைமை சொல்லித்தானே ராஜவர்மனை திரும்பவும் கட்சில சேர்த்திருக்கோம். கிழக்கு மாவட்டத்துல கட்சி வேலை எம்புட்டோ இருக்கு. அதைப் பார்க்காம, என்னைக் கேட்கலைன்னு உங்க மாவட்டச் செயலாளர் குற்றம் சொல்லிட்டிருந்தா நல்லவா இருக்கு’ன்னு அவரோட நியாயத்தச் சொன்னாரு. 

 

ரவிச்சந்திரனுக்கோ ஆத்திரம் குறைஞ்சபாடில்ல. மாவட்டச் செயலாளரான என்னைக் கேட்காம எப்படி கட்சில சேர்க்கலாம்னு,  அவரோட ஆட்கள கூட்டிக்கிட்டு, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். வரைக்கும் போயி புலம்பிட்டு வந்தாரு. இவரோட பேச்சு தலைமைகிட்ட எடுபடல. ரவிச்சந்திரனை, ராஜேந்திரபாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் எதிரான நிலைய எடுக்க வச்சது, இங்கே ஒன்றியச் செயலாளரா இருக்கிற சண்முகக்கனிதான். ஏன்னா.. அரசியல்ல ராஜவர்மனோட வளர்ச்சி, சண்முகக்கனிக்கு பிடிக்காமப் போனதுதான். நிஜத்தை சொல்லணும்னா.. இந்த ரவிச்சந்திரனோ, சண்முகக்கனியோ கட்சி மட்டத்துல, தொண்டர்கள்கிட்ட சொல்லிக்கிற அளவுக்கு செல்வாக்கு இல்லாதவங்க. ஆனாலும்.. ஊராட்சித் தேர்தல் நடக்கிற இந்த நேரத்துல, ஒரு ஸ்டண்ட் அடிச்சுப் பார்த்துடணும்னு திட்டம் போட்டாங்க. 

 

Sathur- admk rajendrabalaji and rajavarman issue

 

இங்கே ஏ.ராமலிங்கபுரம் அதிமுக கிளைச்செயலாளரா இருக்கிற வீரோவுரெட்டி, ராஜேந்திரபாலாஜிகிட்ட அப்பப்ப செலவுக்குப் பணம் வாங்குறவரு. அவரோட பிள்ளைங்க படிப்புச் செலவுக்குக் கூட ராஜேந்திரபாலாஜி நெறய பணம் கொடுத்திருக்காரு. ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு கை நீட்டுற அவர வச்சு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணன் கண்ணு முன்னால ராஜேந்திரபாலாஜிய டென்ஷன் ஆக்கணுங்கிறதுதான் திட்டம். ஊராட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த வழியா எடப்பாடி பழனிசாமி அண்ணன் வந்தப்ப, அவரு இருந்த காருலதான் ராஜேந்திரபாலாஜியும் இருந்தாரு. இந்த வீரோவுரெட்டி என்ன பண்ணுனாருன்னா.. அவங்க வந்த காருகிட்ட போயி, கே.டி.ஆர். ஒழிகன்னு சத்தமா கத்தினாரு. எடப்பாடி அண்ணன் பக்கத்துல இருக்கிறப்ப, தன்கிட்ட பணம் வாங்குற வீரோவுரெட்டி போட்ட ஒழிக கோஷத்தக் கேட்டு கோபத்துல காரைவிட்டு இறங்கி திட்டினாரு ராஜேந்திரபாலாஜி. அவரு திரும்பவும் காருல ஏறி கிளம்பின பிறகு, வீரோவுரெட்டிய கட்சிக்காரங்க அடிச்சதும் விலக்கிவிட்டதும், காருல ஏற்றி அப்புறம் இறக்கிவிட்டதும், போலீஸ் கண்ணு முன்னாலதான் நடந்துச்சு. அந்தக் களேபரத்துல, சாத்தூர் அதிமுக நகரச்செயலாளர் இளங்கோவை ரவிச்சந்திரன், சண்முகக்கனி தரப்பு தாக்கியதும் நடந்துச்சு. ஆனாலும், ராஜேந்திரபாலாஜி மேலயும் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், அவதூறாகப் பேசுதல், ஆள்கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாச்சு. உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்ச பிறகுதான், ராஜேந்திரபாலாஜிக்கு முன்ஜாமீனே கிடைச்சது.

 

Sathur- admk rajendrabalaji and rajavarman issue

 

சரி, ரவிச்சந்திரன் தரப்பு தூண்டிவிட்டு ராஜேந்திரபாலாஜி மேல கேஸ் போடவச்ச வீரோவுரெட்டியோட நிலைமை இப்ப என்ன தெரியுமா? எட்டு வருஷத்துக்கு முன்னால வேலை வாங்கித் தர்றேன்னு திமுக கிளைச்செயலாளர்கிட்ட பணம் வாங்கிருக்காரு. வேலை வாங்கித் தரவுமில்லை. பணத்தையும் திரும்பக் கொடுக்கல. மோசடி புகார்ல இப்ப தலைமறைவா இருக்காரு வீரோவுரெட்டி.   

 

கட்சி நிர்வாகிகளுக்குள் நடக்கிற ‘ஈகோ ஃபைட்’ இங்கே விருதுநகர் கிழக்கு மாவட்டத்துல, அதிமுகங்கிற கட்சியே இல்லாத மாதிரி பண்ணிருச்சு. ராஜவர்மனை கட்சில சேர்த்தா சேர்த்துட்டுப் போகட்டும்னு ரவிச்சந்திரன் நினைச்சிருந்தா, உள்ளாட்சி தேர்தல்ல இத்தனை மோசமான தோல்வி ஏற்பட்டிருக்காது. கட்சிய பலப்படுத்த முடியலைன்னாலும், பலவீனப்படுத்திட்டாங்க. ராஜேந்திரபாலாஜி, ராஜவர்மன், இளங்கோ மாதிரியான கட்சி முக்கியஸ்தர்களைப் பகைச்சுக்கிட்டு, உள்ளாட்சித் தேர்தல்ல என்ன ஓட்டு வாங்க முடியும்? சாதாரண தொண்டனும் தெரிஞ்சு வச்சிருக்கிற இந்த விஷயத்தைக்கூட தெரிஞ்சிக்காம இருக்கிறவங்க கையிலதான் இந்த மாவட்டம் இருக்கு.

 

ad

 

சாத்தூர் கட்சி ஆபீஸ்ல ராஜேந்திரபாலாஜி படம் இருக்கவே கூடாதுன்னு, கழற்றி வீசும்படி செஞ்சாரு. கட்சித் தொண்டன் ஒருத்தன் ரவிச்சந்திரனைப் பார்த்துக் கேட்கிறான், ‘ராஜேந்திரபாலாஜி செய்தி மந்திரியா இருக்கிறப்ப, உங்க மருமகனுக்கு ஏ.பி.ஆர்.ஓ. வேலை போட்டுக் கொடுத்தாருல்ல. அதை ரிசைன் பண்ணச் சொல்ல வேண்டியதுதானே? உயர்கல்வி அமைச்சரா பழனியப்பன் இருந்தப்ப, உங்க வீட்டுக்காரம்மாவுக்கு துணைவேந்தர் பதவி கிடைக்கிறதுக்கு சிபாரி பண்ணுனது ராஜேந்திரபாலாஜிதானே? அவங்கள ராஜினாமா பண்ணச் சொல்லுவீங்களா? ராஜேந்திரபாலாஜியை ராஜவர்மன் பேசாத பேச்சா? அவரே ராஜவர்மனை ஏத்துக்கிட்டாரு. ரவிச்சந்திரன் முரண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம்? கட்சிதான் காணாமப் போய்க்கிட்டிருக்கு.’ என்று ரொம்பவே நொந்துகொண்டார். 

 

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் குமுறலுக்கு விளக்கம்பெற,  விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை ஏற்காமல், தொடர்ந்து நம்மைத் தவிர்த்தபடியே இருந்தார். 

 

தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு மாவட்டம்.. தொகுதிக்குத் தொகுதி.. இதே ரீதியிலான விவகாரங்கள் உள்ளன. உயர்மட்டத் தலைவர்களிடமும் இத்தகைய பிரச்சனைகள் அவ்வப்போது தலைதூக்குகின்றன. ‘இதற்கெல்லாம் தீர்வே இல்லையா? கட்சியைக் காப்பாற்ற யாருமில்லையா?’ எனத் தொண்டர்களும் குமுறவே செய்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.