Skip to main content

போலீஸ் நண்பர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகப் புகார்: உண்மை நிலை என்ன? திருமாவளவன் கேள்வி

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

thirumavalavan

 

போலீஸ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்களா என விசாரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலைகளுக்குப் பிறகு அந்தப் படுகொலையில் போலீஸ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதையொட்டி அந்த அமைப்பைத் தடைசெய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தினோம். அந்தக் கோரிக்கையை ஏற்று இப்போது அந்த அமைப்பு முற்றாகக் கலைக்கப்படுகிறது என ஆணை பிறப்பித்திருப்பதை வரவேற்கிறோம். 

 

இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம் ‘இந்த அமைப்பு சட்டப்படியாக உருவாக்கப்பட்ட அமைப்பா? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தரவேண்டும்’ என அரசுத் தரப்பிடம் கேட்டிருந்தது. இதனிடையில் இந்த அமைப்பு கலைக்கப்பட்டுள்ளது. 

 

போலீஸ் நண்பர்கள் அமைப்பில் பல்வேறு மதவாத அமைப்பினர் இடம் பெற்றிருந்ததாகவும் அவர்கள் காவல் துறையினரோடு சேர்ந்துகொண்டு காவல் நிலையங்களில் பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எனவே உண்மை நிலை என்ன என்பதை அறிவதற்கு இது தொடர்பாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

 

காவலில் நிகழும் வன்முறைகள் குறித்து புகார்கள் தெரிவிப்பதற்காக சுயேச்சையான ஒரு அமைப்பை நிறுவ வேண்டும் என்று 2006 ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு ஆணை பிறப்பித்தது. ஆனால் தமிழ்நாட்டில் அந்த அமைப்பு உருவாக்கப்படாமலேயே இருந்தது. இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரியப்பிரகாசம் என்பவர் வழக்குத் தொடுத்த பின்னரே 2019 ஆம் ஆண்டில் அந்த அமைப்பை உருவாக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

 

ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக உள்துறைச் செயலாளரின் தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சியர்களின் தலைமையிலும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் வன்முறைகள் தொடர்பான தமிழக நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் முறைப்படி அந்தப் புகார் அமைப்பை உடனே நிறுவிடுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.