Skip to main content

"அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுக்க வேண்டும்!" - புகழேந்தி

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

Sasikala should call on ADMK volunteers! - Pugazhendhi

 

அரசியலில் துறவறம் மேற்கொள்வதாக சட்டமன்றத் தேர்தலின்போது வெளிப்படையாக அறிக்கை வாசித்த சசிகலா, தேர்தலுக்குப் பிறகு அமைதியாக இருந்தார். அதிமுக தோல்வியடைந்ததும் சிறிய இடைவெளிக்குப் பிறகு, அதிமுக தொண்டர்கள் தன் பக்கமே இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. அந்த ஆடியோக்கள் அதிமுக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு வார பரபரப்புகளுக்குப் பிறகு, அந்த ஆடியோக்களும் மியூட் செய்யப்பட்டன; சசிகலாவும் மௌனமானார்.

 

இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசியலில் மீண்டும் லைம் லைட்டிற்கு வருவதற்குத் திட்டமிட்ட சசிகலா, அதிமுகவின் பொன்விழா ஆண்டை (17.10.2021) முன்னிட்டு அதிமுகவை தன் பக்கம் ஈர்ப்பதற்காக வெளிப்படையாக வெளியே வருகிறார். சிறையிலிருந்து விடுதலையானதும் சென்னைக்கு வந்த சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதனை ஏனோ சசிகலா செய்யவில்லை.

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டில் தற்போது வெளியே வரும் சசிகலா, நாளை (16.10.2021) ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதன் பிறகு மறுநாள் 17ஆம் தேதி (அதிமுக உருவான நாள்) தி.நகரில் இருக்கும் எம்.ஜி.ஆர். நினைவில்லம் மற்றும் ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் செல்கிறார் சசிகலா.

 

இவரது வருகையைப் பிரம்மாண்டப்படுத்த சசிகலா ஆதரவாளர்கள் பல்வேறு வரவேற்புகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சசிகலாவின் வருகையின்போது அதிமுகவினர் யாரும் அந்த நிகழ்வுகளுக்குச் சென்றுவிடக் கூடாது என அதிமுகவின் மா.செ.க்களுக்கு ரகசிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

 

இந்த நிலையில் சசிகலாவின் வருகை அதிமுக அரசியலில் என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும்? அதிமுக தொண்டர்கள் சசிகலாவின் பின்னால் திரளுவார்களா? என்பது குறித்து அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெங்களூர் புகழேந்தியிடம் நாம் பேசினோம். நம்மிடம் மனம் திறந்த பெங்களூர் புகழேந்தி, “தமிழக அரசியலில் தற்போது அதிமுக எதிர்கொள்வது கடினமான காலக்கட்டம்! உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகளில் அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி, அதிமுகவின் அஸ்திவாரம் ஆடிப்போயிருப்பதாகத்தான் பார்க்கிறேன். தமிழக அரசியல் வரலாற்றில், எத்தனையோ தோல்விகளை அதிமுக சந்தித்து, முன்பைவிட அசுர பலத்துடன் மீண்டு வந்திருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கும் தற்போதைய தேர்தல் தோல்வி, ஜீரணிக்க முடியவில்லை. இந்தத் தோல்வியிலிருந்து மீண்டும் கழகம் உயிர்ப்பெறுமா? என்கிற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல; அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

 

அதிமுகவின் பாரம்பரிய குடும்பத்திலிருந்து போட்டியிட்ட கட்சியின் சீனியர் உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர் கூட தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதற்கு காரணம், மக்களிடம் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்ற அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களைப் பயன்படுத்த எடப்பாடி பழனிசாமி தடை போட்டதும், எடப்பாடி பழனிசாமியின் படங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தியதும்தான். மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களைச் சொல்லி ஓட்டு கேட்டிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

 

இது தவிர, தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிசாமியின் படங்களைப் போடுவதை தவிர்த்திருக்க வேண்டும். தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை முழுமையாக வெறுக்கிறார்கள். அவரது தலைமையை ஏற்க மறுக்கிறார்கள்; ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். சாதி அரசியல் செய்வதும், ஒரு சாதிக்கு மாத்திரம் சாதகமாக இருப்பதுபோல தன்னை காட்டிக்கொண்டதும் அதிமுகவின் படுதோல்விக்கு முக்கியமான காரணம்.

 

ஒரு கொலைப் பழியை எடப்பாடி பழனிசாமி சுமந்து வருவதும், இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊழல் ஆட்சியை நடத்தியவர் என்கிற கெட்டப்பெயரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டிருப்பதுதான் அதிமுகவின் இன்றைய நிலைமைக்கு எதார்த்தமான காரணம். அதிமுகவின் தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் இதுதான் எதிரொலித்தபடி இருக்கிறது.

 

ad

 

எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் ஏற்றுக்கொள்ளாத சூழலில், சசிகலா தமிழக அரசியலுக்குள் வருவதற்கு சரியான தருணம் இதுதான். அவரது வருகையை நான் கூட எதிர்பார்க்கிறேன். வந்தால் அதிமுக அரசியலில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது சந்தேகமில்லை.

 

அதேசமயம்,  அரசியல் வருகையில் தாமதம் கூடாது. தாமதித்தால் இலக்கை அடைவதில் பின்னடைவு ஏற்படும். அதனால், அதிமுகவை ஒருங்கிணைப்பதும் தொண்டர்களை அரவணைப்பதும் அவர்களை ஒற்றுமைப்படுத்துவதும் சசிகலாவின் நோக்கமாக இருந்தால், தாமதமின்றி தயக்கமின்றி அழுத்தமான முடிவுகளை எடுத்து அரசியலுக்குள் வர வேண்டும். ஏனெனில், இனி அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமைதான் தேவை. அந்த ஒற்றைத்தலைமை சசிகலாவின் தலைமையாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.

 

ஆனால், இந்த நிமிடம் வரை முக்கியமானவர்களுக்கு சசிகலாவிடமிருந்து அழைப்பும் இல்லை; தொண்டர்களுக்கும் அழைப்பில்லை! அதிமுகவின் பொன்விழா ஆண்டில் அதிமுகவை தன் பக்கம் ஈர்க்க நினைத்து ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரும் சசிகலா, அதிமுக தொண்டர்களை அழைத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஏன், அந்த அழைப்பு வரவில்லை என்பது தெரியவில்லை.

 

சசிகலாவின் வருகையை தினகரன் விரும்புகிறாரா எனவும் தெரியவில்லை. அரசியலில் எங்கு அவர் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்பதும் புரியவில்லை. அவரது தொண்டர்களாவது சசிகலாவுக்கு பிரம்மாண்டமான வரவேற்பைத் தருவதற்கு முனைப்பாக இருக்கிறார்களா? என்பது கூடவும் ஐயப்பாடாக இருக்கிறது. இத்தகைய சிக்கல்களை சரிசெய்யாமல் போவதுதான் நமக்கு வேதனையாகவும் மன வருத்தமாகவும் இருக்கிறது. அதனால், சசிகலாவின் வருகை, களத்திலே இறங்கி அணுதினமும் அரசியல் பணிகளை அவர் கவனித்தால் அவரால் அரசியலில் சாதிக்க முடியும்! அதிமுகவை மீண்டும் வழிநடத்தவும், பாதுகாக்கவும் ஒரு தலைமையாக அமைய நேரிடும்! தாமதித்தால் எல்லாமே தலைகீழாக மாறிவிடும்!

 

அதிமுகவில் இருக்கும் குழப்பமும், உட்கட்சிப் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பதும்தான் திமுகவின் அசுர வெற்றிக்கு மிக முக்கிய காரணம்! இதனை அவர்கள் உணர வேண்டும். திராவிட இயக்கங்களில் ஒரு இயக்கம் அழிந்துபோய்விடும் என்றால், தமிழக அரசியலில் தேசியக் கட்சியின் வருகையும் ஆதிக்கமும் மேலோங்குவது தவிர்க்க முடியாததாகிவிடும். அந்த சூழ்நிலை உருவானால் திமுகவுக்கு கூட அது ஆபத்தானதுதான்” என்றார் மிக அழுத்தமாக. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.