Skip to main content

"அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுக்க வேண்டும்!" - புகழேந்தி

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

Sasikala should call on ADMK volunteers! - Pugazhendhi

 

அரசியலில் துறவறம் மேற்கொள்வதாக சட்டமன்றத் தேர்தலின்போது வெளிப்படையாக அறிக்கை வாசித்த சசிகலா, தேர்தலுக்குப் பிறகு அமைதியாக இருந்தார். அதிமுக தோல்வியடைந்ததும் சிறிய இடைவெளிக்குப் பிறகு, அதிமுக தொண்டர்கள் தன் பக்கமே இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. அந்த ஆடியோக்கள் அதிமுக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு வார பரபரப்புகளுக்குப் பிறகு, அந்த ஆடியோக்களும் மியூட் செய்யப்பட்டன; சசிகலாவும் மௌனமானார்.

 

இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசியலில் மீண்டும் லைம் லைட்டிற்கு வருவதற்குத் திட்டமிட்ட சசிகலா, அதிமுகவின் பொன்விழா ஆண்டை (17.10.2021) முன்னிட்டு அதிமுகவை தன் பக்கம் ஈர்ப்பதற்காக வெளிப்படையாக வெளியே வருகிறார். சிறையிலிருந்து விடுதலையானதும் சென்னைக்கு வந்த சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதனை ஏனோ சசிகலா செய்யவில்லை.

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டில் தற்போது வெளியே வரும் சசிகலா, நாளை (16.10.2021) ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதன் பிறகு மறுநாள் 17ஆம் தேதி (அதிமுக உருவான நாள்) தி.நகரில் இருக்கும் எம்.ஜி.ஆர். நினைவில்லம் மற்றும் ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் செல்கிறார் சசிகலா.

 

இவரது வருகையைப் பிரம்மாண்டப்படுத்த சசிகலா ஆதரவாளர்கள் பல்வேறு வரவேற்புகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சசிகலாவின் வருகையின்போது அதிமுகவினர் யாரும் அந்த நிகழ்வுகளுக்குச் சென்றுவிடக் கூடாது என அதிமுகவின் மா.செ.க்களுக்கு ரகசிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

 

இந்த நிலையில் சசிகலாவின் வருகை அதிமுக அரசியலில் என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும்? அதிமுக தொண்டர்கள் சசிகலாவின் பின்னால் திரளுவார்களா? என்பது குறித்து அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெங்களூர் புகழேந்தியிடம் நாம் பேசினோம். நம்மிடம் மனம் திறந்த பெங்களூர் புகழேந்தி, “தமிழக அரசியலில் தற்போது அதிமுக எதிர்கொள்வது கடினமான காலக்கட்டம்! உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகளில் அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி, அதிமுகவின் அஸ்திவாரம் ஆடிப்போயிருப்பதாகத்தான் பார்க்கிறேன். தமிழக அரசியல் வரலாற்றில், எத்தனையோ தோல்விகளை அதிமுக சந்தித்து, முன்பைவிட அசுர பலத்துடன் மீண்டு வந்திருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கும் தற்போதைய தேர்தல் தோல்வி, ஜீரணிக்க முடியவில்லை. இந்தத் தோல்வியிலிருந்து மீண்டும் கழகம் உயிர்ப்பெறுமா? என்கிற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல; அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

 

அதிமுகவின் பாரம்பரிய குடும்பத்திலிருந்து போட்டியிட்ட கட்சியின் சீனியர் உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர் கூட தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதற்கு காரணம், மக்களிடம் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்ற அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களைப் பயன்படுத்த எடப்பாடி பழனிசாமி தடை போட்டதும், எடப்பாடி பழனிசாமியின் படங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தியதும்தான். மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களைச் சொல்லி ஓட்டு கேட்டிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

 

இது தவிர, தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிசாமியின் படங்களைப் போடுவதை தவிர்த்திருக்க வேண்டும். தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை முழுமையாக வெறுக்கிறார்கள். அவரது தலைமையை ஏற்க மறுக்கிறார்கள்; ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். சாதி அரசியல் செய்வதும், ஒரு சாதிக்கு மாத்திரம் சாதகமாக இருப்பதுபோல தன்னை காட்டிக்கொண்டதும் அதிமுகவின் படுதோல்விக்கு முக்கியமான காரணம்.

 

ஒரு கொலைப் பழியை எடப்பாடி பழனிசாமி சுமந்து வருவதும், இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊழல் ஆட்சியை நடத்தியவர் என்கிற கெட்டப்பெயரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டிருப்பதுதான் அதிமுகவின் இன்றைய நிலைமைக்கு எதார்த்தமான காரணம். அதிமுகவின் தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் இதுதான் எதிரொலித்தபடி இருக்கிறது.

 

ad

 

எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் ஏற்றுக்கொள்ளாத சூழலில், சசிகலா தமிழக அரசியலுக்குள் வருவதற்கு சரியான தருணம் இதுதான். அவரது வருகையை நான் கூட எதிர்பார்க்கிறேன். வந்தால் அதிமுக அரசியலில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது சந்தேகமில்லை.

 

அதேசமயம்,  அரசியல் வருகையில் தாமதம் கூடாது. தாமதித்தால் இலக்கை அடைவதில் பின்னடைவு ஏற்படும். அதனால், அதிமுகவை ஒருங்கிணைப்பதும் தொண்டர்களை அரவணைப்பதும் அவர்களை ஒற்றுமைப்படுத்துவதும் சசிகலாவின் நோக்கமாக இருந்தால், தாமதமின்றி தயக்கமின்றி அழுத்தமான முடிவுகளை எடுத்து அரசியலுக்குள் வர வேண்டும். ஏனெனில், இனி அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமைதான் தேவை. அந்த ஒற்றைத்தலைமை சசிகலாவின் தலைமையாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.

 

ஆனால், இந்த நிமிடம் வரை முக்கியமானவர்களுக்கு சசிகலாவிடமிருந்து அழைப்பும் இல்லை; தொண்டர்களுக்கும் அழைப்பில்லை! அதிமுகவின் பொன்விழா ஆண்டில் அதிமுகவை தன் பக்கம் ஈர்க்க நினைத்து ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரும் சசிகலா, அதிமுக தொண்டர்களை அழைத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஏன், அந்த அழைப்பு வரவில்லை என்பது தெரியவில்லை.

 

சசிகலாவின் வருகையை தினகரன் விரும்புகிறாரா எனவும் தெரியவில்லை. அரசியலில் எங்கு அவர் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்பதும் புரியவில்லை. அவரது தொண்டர்களாவது சசிகலாவுக்கு பிரம்மாண்டமான வரவேற்பைத் தருவதற்கு முனைப்பாக இருக்கிறார்களா? என்பது கூடவும் ஐயப்பாடாக இருக்கிறது. இத்தகைய சிக்கல்களை சரிசெய்யாமல் போவதுதான் நமக்கு வேதனையாகவும் மன வருத்தமாகவும் இருக்கிறது. அதனால், சசிகலாவின் வருகை, களத்திலே இறங்கி அணுதினமும் அரசியல் பணிகளை அவர் கவனித்தால் அவரால் அரசியலில் சாதிக்க முடியும்! அதிமுகவை மீண்டும் வழிநடத்தவும், பாதுகாக்கவும் ஒரு தலைமையாக அமைய நேரிடும்! தாமதித்தால் எல்லாமே தலைகீழாக மாறிவிடும்!

 

அதிமுகவில் இருக்கும் குழப்பமும், உட்கட்சிப் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பதும்தான் திமுகவின் அசுர வெற்றிக்கு மிக முக்கிய காரணம்! இதனை அவர்கள் உணர வேண்டும். திராவிட இயக்கங்களில் ஒரு இயக்கம் அழிந்துபோய்விடும் என்றால், தமிழக அரசியலில் தேசியக் கட்சியின் வருகையும் ஆதிக்கமும் மேலோங்குவது தவிர்க்க முடியாததாகிவிடும். அந்த சூழ்நிலை உருவானால் திமுகவுக்கு கூட அது ஆபத்தானதுதான்” என்றார் மிக அழுத்தமாக. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

திடீர் திருப்பம்; கூட்டணிக்கான ரூட்டை மாற்றிய பா.ம.க.?

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
sudden turn pmk has changed the route for the alliance

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளை வழங்க அ.தி.மு.க. மறுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் கூட்டணி குறித்து முடிவெடுக்க தைலாபுரத்தில் பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டம் கடந்த 15 ஆம் தேதி (15.03.2024) நடைபெற இருந்த நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகக் கூறப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், தென் சென்னை, சிதம்பரம், தர்மபுரி மற்றும் சேலம் என முக்கிய தொகுதிகளுடன் ஏழு பிளஸ் ஒன் (மாநிலங்களவை பதவி) என முடிவாக உள்ளதாகச் சொல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பா.ம.க. விரும்பும் 7 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா பதவியையும் ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் இல்லத்தில் பா.ம.க. எம்.எல்..ஏ அருள் இ.பி.எஸ்சை திடீரென்று நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது எனத் தகவல் வெளியாகி இருந்தது. முன்னதாக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

sudden turn pmk has changed the route for the alliance

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்படுகிறது.