Skip to main content

ஜெ. சமாதி விசிட்: ட்விஸ்ட் கொடுத்த சசிகலா! 

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

Sasikala who gave the twist on jayalalitha memorial visit

 

எம்.ஜி.ஆரால் 1972இல் துவக்கப்பட்டு, ஜெயலலிதாவால் 2016வரை பாதுகாக்கப்பட்ட அதிமுகவுக்கு அக்டோபர் 17ஆம் தேதி பொன்விழா நாள். ஓராண்டுக்கான கொண்டாட்டம் பற்றி ஓ.பி.எஸ்.சும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிவித்திருக்கிறார்கள். ஆலோசனைக் கூட்டமும் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே, பொன்விழா ஆண்டில் அதிமுகவைக் கைப்பற்றுவேன் என சூளுரைத்திருக்கிறார் சசிகலா. 

 

அதிமுக மற்றும் அமமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் கடந்த புதன்கிழமை (13.10.2021) கலந்துரையாடியிருக்கும் சசிகலா, சில அசைன்மெண்டுகளை அவர்களுக்குக் கொடுத்துள்ளார். அதுகுறித்து சசிகலா தரப்பில் விசாரித்தபோது, "சின்னம்மா சசிகலாவால் நலமும் வளமும் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர், பணி ஓய்வுக்குப் பிறகும் சின்னம்மாவுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள்; ஆலோசனைகளை வழங்குகிறார்கள். அதிமுக பொன்விழா ஆண்டு குறித்து சமீபத்தில் அவர்களுடன் சசிகலா விவாதித்திருக்கிறார். 

 

அப்போது ‘தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக சட்டமன்றத்தேர்தல் சமயத்தில் அறிவித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு அதனை வாபஸ் பெறும் வகையில் நடந்துகொண்டீர்கள். கட்சியை கைப்பற்றுவேன்; அதிமுக நம்மிடம் வரும் என்றெல்லாம் அதிமுக நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோக்களை வெளியிட்டீர்கள். அந்தப் பேச்சு உங்கள் விசுவாசிகளிடம் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், சில நாட்கள் பரபரப்புக்குப் பிறகு அதுவும் ஓய்ந்துவிட்டது. நீங்களும் அமைதியாகிவிட்டீர்கள். அரசியலில் அமைதியாக இருப்பது பலவீனம். உண்மையிலேயே அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால் உங்களின் மௌனத்தைக் கலைத்துவிட்டு வெளியே வாருங்கள்’ என அட்வைஸ் செய்திருக்கிறார்கள் அந்த அதிகாரிகள். 

 

இதனையடுத்து ஒரு முடிவுக்கு வந்த சின்னம்மா, கட்சியின் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, ‘கரோனா கட்டுப்பாடுகளால்தான் நான் அமைதியாக இருந்தேன். இனி அப்படி இருக்க மாட்டேன். அதிமுகவின் பொன்விழா ஆண்டு என்பதால் விமரிசையாக செய்ய வேண்டும். நான் அமைதியாக இருப்பதைப் பலவீனமாகிவிட்டதாக துரோகிகள் (எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள்) நினைக்கிறார்கள். 'நான் யார் என்பதைக் கட்சியின் பிறந்தநாளில் காட்டப்போகிறேன்' என சொல்லி சில முடிவுகளை எடுத்துள்ளார் சின்னம்மா சசிகலா'' என்று சுட்டிக்காட்டினார்கள். 

 

தனது மௌனத்தைக் கலைக்க முடிவு செய்திருக்கும் சசிகலா, அதிமுகவின் பிறந்தநாளில் (அக்டோபர் 17ஆம் தேதி) ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதாக முடிவுசெய்தார். ஆனால், அன்றைய தினம் ஓபிஎஸ்., இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக தலைவர்களும் ஜெயலலிதா சமாதிக்கு வருவார்கள். இரு தரப்புக்கும் மோதல் வரலாம் அல்லது சசிகலா செய்தியைவிட அதிமுக தலைவர்களின் செய்தியை ஊடகங்கள் பெரிதாக பிரம்மாண்டப்படுத்தலாம். அதனால், முதல்நாளே (அக்டோபர் 16ஆம் தேதி) ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்வோம் என தீர்மானித்தார் சசிகலா. 

 

ad

 

மறுநாள் கட்சியின் பிறந்தநாளில் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கும், ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த இல்லத்துக்கும் செல்வது என முடிவு செய்யப்பட்டது. ராமாபுரத்தில் எம்.ஜி.ஆர். இல்ல வளாகத்திலிருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு (சசிகலா அமைத்தது) மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு, அதே வளாகத்திலுள்ள காது கேளாதோர் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து சில நலத்திட்ட உதவிகள் வழங்கவும் முடிவு செய்திருக்கிறார்.

 

சிறையிலிருந்து இந்த வருடம் துவக்கத்தில் விடுதலையாகி சென்னைக்கு வந்த அவர், வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று வழிபடுவார் என சொல்லப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக பெருந்தலைகள் எல்லோரும் தன்னை சந்திக்க வருவார்கள்; அவர்களுடன் சென்று ஜெயலலிதா நினைவிடத்தை வழிபடலாம் என அவர் போட்ட மனக்கணக்கும் பிழையாகிப் போனது. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியையும் அதிமுக இழந்ததால் சசிகலாவும் அமைதியானார். ஆடியோக்களை ரிலீஸ் செய்து தற்காலிக பரபரப்பை ஏற்படுத்தியதைத் தவிர வேறு எதையும் சசிகலாவால் செய்ய முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் மீண்டும் லைம்லைட்டிற்கு வரத் துடிக்கிறார் சசிகலா. 

 

சிறைக்குச் செல்வதற்கு முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் அடித்து சில சபதங்களை எடுத்த சசிகலா, அதை நிறைவேற்ற உறுதிகொள்ளும் வகையில் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் செல்கிறார். அதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்துவருகின்றன. தி.நகர் மற்றும் ராமாவரம் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை அமமுக வைத்தியநாதனிடம் ஒப்படைத்துள்ளார் சசிகலா.

 

ஜெயலலிதா நினைவிடத்தில் வணங்கி மீண்டும் தனது அரசியலை துவங்கும் சசிகலா, கட்சியின் பொன்விழா ஆண்டில் அதிமுகவைக் கைப்பற்ற, தமிழ்நாடு முழுவதும் அதிமுக நிர்வாகிகளை சந்திக்கும் பயணத்திட்டம் வகுக்கப்படவிருக்கிறது. கரோனா நெருக்கடிகளாலும் கட்டுப்பாடுகளாலும் ஒத்திவைக்கப்பட்டிருந்த அவரது சுற்றுப்பயணம் இந்த ஆண்டில் துவங்குகிறது. 

 

இதுபற்றி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவிலுள்ள சசிகலா எதிர்ப்பு தலைவர்கள் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. அதனால் 'சசிகலாவின் வருகை புயலாக மையம் கொள்ளுமா? புஸ்வாணமாகுமா? அல்லது வரவேமாட்டாரா? என்பதெல்லாம் விரைவில் தெரியும்' என்கிறார்கள் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளிர் வாக்குகளை ஈர்க்கும் திமுக! தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கணிப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 Election strategists prediction on Clean sweep victory in the election

அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் முக்கியமான பகுதியினர் பெண்கள். அந்த வாக்கு வங்கியை இலக்காக வைத்து, தி.மு.க தொடர்ச்சியாக வேலை செய்து வருவது இந்தத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிகின்றது. 2024 தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய மூன்று முக்கியமான விஷயங்கள்,  மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவை. இத்துடன் காலை உணவுத் திட்டம். இவை அனைத்தும் பெண் வாக்காளர்களின் மனங்களை ஒட்டுமொத்தமாக கவரும் நோக்கத்திலானவை என்பது வெளிப் படையான உண்மை !

முந்தைய தலைமுறைக்கு முன்னர் பெண்கள் படிப்பதும், படித்து முடித்து விட்டாலும் வேலைக்கு செல்வது என்பதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. இதனால் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கு கல்வியும், பொருளாதார விடுதலையும் முக்கியமானதாக பேசப்பட்டது. டாக்டர் பட்டமே பெண் பெற்றிருந்தாலும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டவில்லை எனில், அந்தப் பட்டம் வெறும் திருமண பத்திரிக்கையில் பெயருடன் இணைத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். உலகம் முழுவதும் பெண்கள் முன்னேற்றம் என்பது பல மடங்கு இந்தியாவை விட உயர்ந்திருப்பதற்கு காரணம், அங்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதுதான்.

திராவிட இயக்கங்களின் மிக முக்கியமான இலக்கு பெண் உரிமையும், சமத்துவமும் தான். பெரியார், பெண் உரிமைகளுக்கு எனத் தனித் தீர்மானங்களையும் நிறைவேற்றி இருக்கிறார். 1929 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் ‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை’ எனும் தீர்மானம். பெரியார் உயிருடன் இருக்கும் வரை, அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், 1989 ஆம் ஆண்டு கலைஞரால் தமிழ் நாட்டில் பெரியார் கண்ட கனவு சட்டமாக்கப்பட்டது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இந்த வரலாற்றில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம், பெண் பொருளாதாரச் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்தினார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பெண்களின் உயர் கல்விக்கு மாதம் 1000 ரூபாய் இவையும் பெண்களைக் கவரும் திட்டங்கள். இத்திட்டங்களின் மூலம் 1 கோடியே 6 இலட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். இது உளவியல் ரீதியாக பெண்களுக்குப்  பெரும் பலத்தைக் கொடுக்கிறது இந்தத் திட்டங்கள்.

கலைஞர் கொண்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தைத்தான், ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 50000 ஆகவும், தாலிக்கு தங்கம் என்றும் அறிவித்தார்.  இதே திட்டத்தைதான், இன்றைய கால வளர்ச்சிக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலின், ‘புதுமைப் பெண் திட்டம்’ ஆக மாற்றி, தாலிக்குத் தங்கம் என்பதைவிட, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 என்ற முற்போக்கான திட்டமாகக் கொண்டுவந்தார். இது இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தால் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை 29 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலேயே பெண்கள் உயர்கல்வி சேர்க்கையில் 48.6% பெற்று பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் புதுமைப் பெண் திட்டம் மூலமாகத் தமிழ்நாடு மிக பெரிய அளவில் முன்னேறி இருக்கும்.

தாலிக்குத் தங்கம் தராமல் இருப்பதைத் தங்களுக்குச் சாதகம் ஆக்கிக் கொள்ள முடியுமா என்று இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் முயலுகின்றனர். ஆனால் பெண் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்பதைத்தான் தாய்மார்கள் விரும்புகின்றனர். 1921-இல் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது நீதிக்கட்சி. அப்போது தொடங்கி, பெண்கள் உரிமையில் இரண்டு திராவிடக் கட்சிகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதில், எம்.ஜி.ஆர் என்கிற ஆளுமை பிம்பமும், ஜெயலலிதா என்கிற பெண் ஆளுமைப் பிம்பமும் அ.தி.மு.கவிற்குப் பெண்கள் வாக்கு வங்கியை உருவாக்கித் திடப்படுத்தியது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இப்போது அந்த வாக்கு வங்கியைத் தனக்கானதாக மாற்ற ஸ்டாலின் முயன்றுள்ளார். அதில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கணிசமாக வெற்றி பெறவும் செய்தார். 2024 இல் இன்னும் பெரிய அளவில் பெண்கள் தி.மு.கவிற்கு வாக்கு அளிப்பார்கள் என்று கணிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஏழைப் பெண்களுக்கு ஆண்டிற்கு 1 இலட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம், மத்திய வேலைவாய்ப்பில் 50 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு ஆகியவையும் பெண் வாக்காளர்களைக் கவர்ந்திருப்பதாகவே சில புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே இம்முறை 10 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேர் அதிகமாக இருக்கிறார்கள். அதனால், இந்த முறை பெண்கள் அளிக்கும் வாக்குகள், தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வெற்றியை  க்ளின் ஸ்வீப் செய்ய உதவும் என்கிறார்கள் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.