Skip to main content

“முதல்வர் உணர்வுக்கு மதிப்பளித்து ஆளுநர் நீக்கப்பட வேண்டும்” - முத்தரசன்

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Respecting spirit CM stalin letter, Governor RN Ravi should be removed says mutharasan

 

முதலமைச்சர் கடிதத்தின் உணர்வை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறல்களை பட்டியலிட்டு குடியரசுத் தலைவருக்கு விரிவான கடிதம் எழுதியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

 

ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பேற்ற ஆரம்ப நாளில் இருந்தே அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ள சட்டப்படியான கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை. மாறாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அமைக்கப் பெற்றுள்ள சட்டமன்றப் பேரவையின் அதிகாரத்தில் தலையிட்டு இடையூறு செய்வது, அமைச்சரவையின் ஆலோசனைகளை நிராகரித்து மக்களாட்சி முறையை அவமதிப்பது, அரசின் கொள்கை முடிவுகள் மீது பகிரங்கத் தாக்குதல் நடத்துவது, முதலமைச்சரின் முதலீடு திரட்டும் வெளிநாட்டு பயணத்தை கேலி செய்து, ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தி அரசின் உயர் கல்வித்துறை நிர்வாகத்தில் தலையிட்டு எதிர்நடவடிக்கை மேற்கொள்வது என எல்லை கடந்து செயல்பட்டு ஆளுநர் பொறுப்புக்கு ஊசி முனையளவும் பொருத்தம் இல்லாதவர் என்பதை வெளிப்படுத்தி வருகிறார்.

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறல்கள் மற்றும் அநாகரிக செயல்பாடுகள் குறித்து கடந்த ஜனவரி 11 ஆம் தேதியும் கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் வரம்பு மீறிய செயல்பாடுகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மக்களின் போராட்டங்களும்  நடந்து வருகின்றன.

 

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் ஒட்டுமொத்த ஜனநாயக உணர்வை பிரதிபலித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருப்பது மிகவும் பொருத்தமானது. முதலமைச்சரின் கடிதத்தின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவரை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“விரைவில் நிலைமை சீரடையும்” - மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

The situation will improve soon CM MK Stalin on the impact of Cyclone Migjam

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்புகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் எனப் பலரும் உடன் இருந்தனர். அதேபோன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார்.

 

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “கொளத்தூர், திரு.வி.க. நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் மிக்ஜாம் புயல் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். வெள்ள நீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.

 

மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

‘மிக்ஜாம்’ புயல் நிவாரணப் பணி; முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

'Miqjam' storm relief mission; Chief Minister M. K. Stalin's action order

 

‘மிக்ஜாம்’ புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாகச் சென்னை நகரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களை நியமித்து கடந்த 4 ஆம் தேதி (04.12.2023) தமிழக அரசு சார்பில் ஆணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்த ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர்களுடன், கூடுதல் அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி அமைச்சர் எஸ். ரகுபதி கே.கே. நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கும், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும், அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ராயபுரம் பகுதிக்கும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வில்லிவாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், கே.கே. நகர் ஆகிய பகுதிகளுடன் கூடுதலாக அரும்பாக்கம் பகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

அதே சமயம் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணித்து, அலுவலர்களுக்கு மீட்புப் பணிகளுக்குத் தேவையான உத்தரவுகளை வழங்கி, மீட்பு மற்றும் நிவாரணப் பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகளை சேகரித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து மீட்புப் பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவையும் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும், அமைச்சர் மா. மதிவேந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார் ஆகியோரை திருவொற்றியூர் பகுதிக்கு நியமித்து நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்