Skip to main content

“சட்ட ஒழுங்கு பிரச்சனைய ஏற்படுத்தவே இந்த ரெயிடு..” - ஆர்.எஸ். பாரதி 

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

"This raid is to create law and order problem.." - R.S. Bharti

 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “ராமர் பெயரை பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடித்ததுபோல், அனுமன் பெயரை பயன்படுத்தி கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நாடகம் ஆடினார்கள். அனுமன் கர்நாடகாவில் பிறந்தார் எனச் சொல்லி அங்கு அரசியல் நடத்தினார்கள். வாட்ஸ் அப், ஊடகங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள்... ஒரு கவரின் ஐந்து இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து அதன் மேல் தாமரை சின்னத்தை வைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். ரூ. 2000 நோட்டு 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அவ்வளவாக புழகத்தில் இல்லை. இது தொடர்பாக என் மீது வழக்கு போட்டாலும் கூட அவர்கள் கொடுத்த பணத்திற்கான ஆதாரங்கள் இருக்கிறது அதனை நிரூபிக்க நானும் காங்கிரஸ் கட்சியினரும் தயாராக இருக்கிறோம். இத்தனை நாடகங்களுக்கு பிறகும் மிகப் பெரிய வெற்றியை கர்நாடகா மக்கள் காங்கிரஸுக்கு அளித்துள்ளனர். 

 

கர்நாடகாவில் முதல் விக்கெட் விழுந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பைனல் மேட்சில் மேன் ஆஃப் தி மேட்சாக எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என நான் ஏற்கனவே பேசியுள்ளேன். தேர்தலின் முடிவு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2000 ரூபாய் நோட்டு விவகாரம் கூட கர்நாடகா தேர்தல் முடிவு காரணமாக இருக்கக்கூடுமோ என சில அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது நம்பத்தக்கதாகவும் இருக்கிறது. அண்ணாமலை கர்நாடகாவில் தோல்வியை சந்தித்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்ததும் அவரை அடையாளம் காட்டிக்கொள்ள ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில், ‘பாஜக மற்றும் அதன் அதிகாரம் குறித்து இன்னும் 10 நாட்களில் செந்தில் பாலாஜி தெரிந்து கொள்வார்’ எனப் பேசினார்.

 

இது மட்டுமல்ல 2022 ஆகஸ்ட் மாதத்தில், ‘அமலாக்கத்துறை தற்போது பிசியாக உள்ளது. அந்த பிஸியை எல்லாம் முடித்துவிட்டு செந்தில் பாலாஜிக்கு ரெயிடு வருவார்கள்’ என பகிரங்கமாக சொன்னார். செந்தில் பாலாஜியை குறி வைக்க காரணம், கோவை மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணி கனிசமான இடங்களைப் பெற்றது. ஆனால், தேர்தல் முடிந்து இந்தப் பகுதிகளுக்கு செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 100க்கு 100 திமுக வெற்றி பெற்றது. ஆகவே அவரை முடக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட காரியங்களில் அண்ணாமலை திட்டமிட்டு செய்திருக்கிறார் என்பதற்கு அவரின் முந்தைய பேச்சுக்களே உதாரணமாக காட்ட முடியும். முதலமைச்சர் இங்கு இல்லாதபோது இப்படியான காரியங்களை செய்வது பாஜகவின் கேவலமான அரசியலை காட்டுகிறது.

 

எங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 23 ஆம் தேதி சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று உலக முதலீட்டாளர்களின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு இழுக்கச் சென்றிருக்கிறார். அதன்படி அவர் தினமும் முதலிட்டாளர்களைச் சந்தித்து இங்கு கொண்டுவரும் முதலீடுகளை குறித்த செய்திகள் தேசிய பத்திரிகைகளில் எல்லாம் வந்துகொண்டிருக்கிறது. எனவே இதனை திசை திருப்ப என்ன முயற்சி எனும் வஞ்சக எண்ணத்தோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரில் இல்லாத நேரத்தில் பாஜக அரசு இன்று ரெயிடு நடத்தியிருக்கிறார்கள். திமுக எந்த காலத்திலும், ரெயிடுகளுக்கு பயந்ததில்லை. 1976 அவசர காலகட்டத்திலேயே ரெயிடு என்றால் என்னவென்றே தெரியாதபோதே ரெயிடுகளை எதிர்கொண்டு முறியடித்து வெற்றி பெற்ற இயக்கம் திமுக. 

 

ஒரு ரெயிடு நடக்கிறது என்றால், மாநில காவல்துறையிடம் தெரிவித்து, உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் ரெயிடுக்கு செல்வதுதான் வழக்கம். ஆனால் இன்று எந்த தகவலும் வரவில்லை என மாவட்ட எஸ்.பி.யே சொல்கிறார். இதில் சந்தேகம் எழுகிறது. எந்தவித அடையாளமும் இல்லாமல் விடியற்காலை மூன்று மணிக்கு வந்திருக்கிறார்கள். அதனால், அங்கிருந்தவர்கள் அவர்கள் யாரெனத் தெரியாமல் தற்காப்புக்காக வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கியிருக்கலாம். ஆனால், எனக்கு விவரம் வந்தவுடனேயே செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு திமுகவினர் யாரும் அங்கிருக்கக் கூடாது என்று சொன்னேன். அவரும் உடனடியாக அங்கிருந்து அவர்களை கலைந்துபோக செய்திருக்கிறார். 

 

இதில் இருந்து என்ன தெரிகிறது. ஐ.டி. அதிகாரிகளை அடித்தார்கள் என செய்தியாக்கி திட்டமிட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என பொதுமக்கள் கூட சொல்லும் அளவுக்கு இந்த சோதனை நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது எவ்வளவு கலவரங்கள் நடந்தன. ஆனால், அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் நடவடிக்கை எடுத்தார்களா” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
cm stalin announced that relief of Rs.6 thousand will be given to the affected people

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு இழப்பீடு தொகையாக ஏற்கனவே வழங்கி வந்த ரூ. 5 ஆயிரத்திலிருந்து தற்போது ரூ. 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்; நெற்பயிர் பாதிப்புகளுக்கான இழப்பீடு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

“புயல் எச்சரிக்கை கொடுத்தும் அரசு மெத்தனமாக இருந்திருக்கிறது” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
edappadi Palaniswami accused Tamil Nadu government of flooding in Chennai

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் திருவெற்றியூரில் வெள்ள நிவாரண பணிகளை மக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஊழலில்தான் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக விளங்குகிறது. கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் ஆகிய மூன்றில்தால் தமிழ்நாடு முதன்மை மாநிலம். திமுக அரசு அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் கோடி திட்டங்களில் பெரும் ஊழல் நடந்திருப்பது. 

2015 ஆம் ஆண்டு கன மழை காரணமாகத் துரித நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விரைந்து மக்களுக்கு மின்சாரம் கொடுத்தோம். ஆனால் தற்போது அப்படியில்லை. இந்த மாதிரி மழைக் காலங்களில் மக்களுக்கு மின்சாரம் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காகத்தான் தரையில் மின்சாரம் உயரை பதித்து மின் இணைப்பு அளித்தோம். தற்போது மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு நாங்கள்தான் காரணம். மழை வெள்ளம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே வடகிழக்கு பருவ மழை வரும்போது சென்னை மாநகர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது என்று எல்லாருக்கும் தெரியும்; அதனால் பால் தட்டுப்பாடு வரும் என்று அரசுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது மழைக்கு முன்பே நியாய விலை கடைகளின் மூலம் பால் பவுடரை மக்களுக்கு விநியோகம் செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?  புயல் வரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தும் இந்த அரசாங்கம் மெத்தனமாக இருந்திருக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் உணவு, பால், குடிநீர் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கவில்லை” என்று தமிழக அரசு மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.