Skip to main content

“சட்ட ஒழுங்கு பிரச்சனைய ஏற்படுத்தவே இந்த ரெயிடு..” - ஆர்.எஸ். பாரதி 

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

"This raid is to create law and order problem.." - R.S. Bharti

 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “ராமர் பெயரை பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடித்ததுபோல், அனுமன் பெயரை பயன்படுத்தி கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நாடகம் ஆடினார்கள். அனுமன் கர்நாடகாவில் பிறந்தார் எனச் சொல்லி அங்கு அரசியல் நடத்தினார்கள். வாட்ஸ் அப், ஊடகங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள்... ஒரு கவரின் ஐந்து இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து அதன் மேல் தாமரை சின்னத்தை வைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். ரூ. 2000 நோட்டு 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அவ்வளவாக புழகத்தில் இல்லை. இது தொடர்பாக என் மீது வழக்கு போட்டாலும் கூட அவர்கள் கொடுத்த பணத்திற்கான ஆதாரங்கள் இருக்கிறது அதனை நிரூபிக்க நானும் காங்கிரஸ் கட்சியினரும் தயாராக இருக்கிறோம். இத்தனை நாடகங்களுக்கு பிறகும் மிகப் பெரிய வெற்றியை கர்நாடகா மக்கள் காங்கிரஸுக்கு அளித்துள்ளனர். 

 

கர்நாடகாவில் முதல் விக்கெட் விழுந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பைனல் மேட்சில் மேன் ஆஃப் தி மேட்சாக எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என நான் ஏற்கனவே பேசியுள்ளேன். தேர்தலின் முடிவு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2000 ரூபாய் நோட்டு விவகாரம் கூட கர்நாடகா தேர்தல் முடிவு காரணமாக இருக்கக்கூடுமோ என சில அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது நம்பத்தக்கதாகவும் இருக்கிறது. அண்ணாமலை கர்நாடகாவில் தோல்வியை சந்தித்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்ததும் அவரை அடையாளம் காட்டிக்கொள்ள ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில், ‘பாஜக மற்றும் அதன் அதிகாரம் குறித்து இன்னும் 10 நாட்களில் செந்தில் பாலாஜி தெரிந்து கொள்வார்’ எனப் பேசினார்.

 

இது மட்டுமல்ல 2022 ஆகஸ்ட் மாதத்தில், ‘அமலாக்கத்துறை தற்போது பிசியாக உள்ளது. அந்த பிஸியை எல்லாம் முடித்துவிட்டு செந்தில் பாலாஜிக்கு ரெயிடு வருவார்கள்’ என பகிரங்கமாக சொன்னார். செந்தில் பாலாஜியை குறி வைக்க காரணம், கோவை மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணி கனிசமான இடங்களைப் பெற்றது. ஆனால், தேர்தல் முடிந்து இந்தப் பகுதிகளுக்கு செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 100க்கு 100 திமுக வெற்றி பெற்றது. ஆகவே அவரை முடக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட காரியங்களில் அண்ணாமலை திட்டமிட்டு செய்திருக்கிறார் என்பதற்கு அவரின் முந்தைய பேச்சுக்களே உதாரணமாக காட்ட முடியும். முதலமைச்சர் இங்கு இல்லாதபோது இப்படியான காரியங்களை செய்வது பாஜகவின் கேவலமான அரசியலை காட்டுகிறது.

 

எங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 23 ஆம் தேதி சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று உலக முதலீட்டாளர்களின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு இழுக்கச் சென்றிருக்கிறார். அதன்படி அவர் தினமும் முதலிட்டாளர்களைச் சந்தித்து இங்கு கொண்டுவரும் முதலீடுகளை குறித்த செய்திகள் தேசிய பத்திரிகைகளில் எல்லாம் வந்துகொண்டிருக்கிறது. எனவே இதனை திசை திருப்ப என்ன முயற்சி எனும் வஞ்சக எண்ணத்தோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரில் இல்லாத நேரத்தில் பாஜக அரசு இன்று ரெயிடு நடத்தியிருக்கிறார்கள். திமுக எந்த காலத்திலும், ரெயிடுகளுக்கு பயந்ததில்லை. 1976 அவசர காலகட்டத்திலேயே ரெயிடு என்றால் என்னவென்றே தெரியாதபோதே ரெயிடுகளை எதிர்கொண்டு முறியடித்து வெற்றி பெற்ற இயக்கம் திமுக. 

 

ஒரு ரெயிடு நடக்கிறது என்றால், மாநில காவல்துறையிடம் தெரிவித்து, உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் ரெயிடுக்கு செல்வதுதான் வழக்கம். ஆனால் இன்று எந்த தகவலும் வரவில்லை என மாவட்ட எஸ்.பி.யே சொல்கிறார். இதில் சந்தேகம் எழுகிறது. எந்தவித அடையாளமும் இல்லாமல் விடியற்காலை மூன்று மணிக்கு வந்திருக்கிறார்கள். அதனால், அங்கிருந்தவர்கள் அவர்கள் யாரெனத் தெரியாமல் தற்காப்புக்காக வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கியிருக்கலாம். ஆனால், எனக்கு விவரம் வந்தவுடனேயே செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு திமுகவினர் யாரும் அங்கிருக்கக் கூடாது என்று சொன்னேன். அவரும் உடனடியாக அங்கிருந்து அவர்களை கலைந்துபோக செய்திருக்கிறார். 

 

இதில் இருந்து என்ன தெரிகிறது. ஐ.டி. அதிகாரிகளை அடித்தார்கள் என செய்தியாக்கி திட்டமிட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என பொதுமக்கள் கூட சொல்லும் அளவுக்கு இந்த சோதனை நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது எவ்வளவு கலவரங்கள் நடந்தன. ஆனால், அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் நடவடிக்கை எடுத்தார்களா” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.