Skip to main content

ஜம்மு - காஷ்மீர் நிலவரம்; உங்களால் முடியுமா? - அமித்ஷாவிற்கு ராகுல் சவால்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Rahul challenges Amit Shah on Jammu and Kashmir

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் 3,970 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டின் குமரியில் துவங்கிய இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு ராகுல் காந்தி மேற்கொண்டார்.

 

ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்தில் அவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கு கொண்டனர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து எம்.பி. கனிமொழி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும்  கலந்துகொண்டனர். 

 

இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் காந்தியின் நினைவுநாளான இன்றுடன் நிறைவடைந்தது. ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தை நிறைவு செய்தார். நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி. உரையாற்றினார்.

 

இதையடுத்து நிறைவு விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “பாஜக தலைவர்கள் கூறுவது போல் காஷ்மீரில் அமைதி திரும்பவில்லை. படுகொலைகள், குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எனக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் நான் இதைப்பற்றி பேசும்பொழுது பாதுகாப்பு மேம்பட்டு இருந்தால், ஏன் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று என்னிடம் திருப்பி கேட்டனர்.

 

நான் காஷ்மீரில் நுழைந்த 21ம் தேதி முதல் தற்போது வரை காங்கிரஸ் கட்சி தான் எனக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. காஷ்மீரில் மிக நல்ல முறையில் இருந்தால் பாஜகவினர் ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை ஏன் பாதயாத்திரை நடக்கக் கூடாது. மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை என்னை போன்று யாத்திரை நடத்தத் தயாரா? என அவருக்கு சவால் விடுகிறேன்.

 

எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கிறது என பாஜக கூறி வருகிறது. எந்த அடிப்படையில் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. பாஜகவிற்கு எதிராகவே அனைத்து எதிர்க்கட்சிகளின் பார்வையும் உள்ளது. அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிப் பேசி ஒற்றுமையுடன் உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு இடையில் பாகுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாஜகவை எதிர்ப்பதில் ஒற்றுமையாகவே உள்ளனர்.

 

இந்த போர் ஆர்எஸ்எஸ் - பாஜக சித்தாந்தத்திற்கு எதிரானது. ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். நடைப்பயணம் மேற்கொண்டபோது ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் மக்களைச் சந்தித்தேன். இங்கு நடைபெற்று வரும் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. இந்திய ஒற்றுமை பயணம் மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் தேசிய அரசியலில் பிரம்மாண்ட நிகழ்வை உண்டாக்கும் என நம்புகிறேன். ஆனாலும் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.