Skip to main content

“எதிர்த்துப் போராடிய இளைஞர்களை மோடி மிரட்டினார்” - ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

Rahul Accusation PM Modi on his bharat jodo yatra
கோப்புப் படம் 

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நடை பயணம், இன்று வெள்ளிக்கிழமை, உத்தரப்பிரதேசத்திலிருந்து ஹரியானாவை எட்டியது. ஹரியானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பேசிய ராகுல் காந்தி, ராணுவ வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் அக்னிபாத் திட்டம், ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

 

ராகுல் காந்தியின் நடை பயணத்துக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவரும் சூழலில், தற்போது அவரது பேச்சின் மீதான கவனம் இந்தியா முழுக்க அதிகரித்துள்ளது. ஹரியானாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தை பறிப்பதற்காகவே அக்னி பாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இதுநாள்வரை இளைஞர்கள் ராணுவத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வூதியம் பெற்றுவந்தனர். ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்த அக்னி பாத் திட்டத்தின் மூலம், ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் தூக்கியெறியப்பட்டுள்ளது. 6 மாதம் பயிற்சி, 4 ஆண்டு காலம் மட்டுமே ராணுவத்தில் பணி என்பதன்மூலம், ராணுவ வீரர்களின் ராணுவத்துக்காக சேவை செய்யும் கனவு பறிக்கப்பட்டதோடு, அவர்களுக்குரிய ஓய்வூதிய பலன்களும் நீக்கப்பட்டு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இதுதான் மோடி சொல்லும் புதிய இந்தியா” என்று கடுமையாக மோடி அரசை விமர்சித்தார்.

 

மேலும், “இந்த அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு வந்த இளைஞர்களை, போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படங்கள் வெளியானால் அவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை தரப்படமாட்டாது என்று மோடி மிரட்டினார். இப்படியாக, இளைஞர்களை மட்டுமல்லாது, விவசாயிகள், தொழிலாளர்களைப் பயமுறுத்துவது தான் பா.ஜ.க.வின் கொள்கை.

 

21ஆம் நூற்றாண்டில், ஹரியானா வேலையில்லாத் திண்டாட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க., இம்மாநிலத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது. இந்தியாவில் இரண்டுவிதமான இந்தியாக்கள் உள்ளன. ஒரு இந்தியாவில், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்கள் நிறைந்திருக்கிறார்கள். இன்னொரு இந்தியாவில் நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதியை வைத்திருக்கும் 200 - 300 பெருந்தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரியமைப்பும், இந்த அரசின் கொள்கைகள் கிடையாது, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை அழிக்கும் ஆயுதங்கள்!

 

எனது நடை பயணத்தில் கிழிந்த ஆடைகளுடன் கலந்துகொள்ளும் எண்ணற்ற எளிய மக்களையோ, பேசும் பேச்சுக்களையோ கவனத்தில் கொள்ளாமல், நான் அணிந்திருக்கும் டி-ஷர்ட்டை ஊடகங்களும் மற்றவர்களும் விமர்சனம் செய்கிறார்கள். நாட்டில் பரவிவரும் வெறுப்பு மற்றும் வன்முறையை அகற்றிவிட்டு, மக்களின் கவனத்தை ஈர்ப்பதே நடை பயணத்தின் நோக்கம்.

 

எனது நடை பயணத்தில் குளிர்காலத்தில் டி-ஷர்ட் அணிந்திருப்பதால் என்னால், 110 நாட்களில் 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை நடந்தே கடக்க முடிந்திருக்கிறது. குளிரின் தாக்கம் எனக்கு ஏற்படவில்லை. இந்த நாட்டில், விவசாயிகள், ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஏன் டி-சர்ட்கள் மற்றும் ஸ்வெட்டர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்? ஏன் கிழிந்த ஆடைகளில் இருக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்” என்று காட்டமாக விமர்சித்துப் பேசினார்.

- தெ.சு.கவுதமன்

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.