Skip to main content

புதுச்சேரி சபாநாயகராக பதவியேற்ற பாஜக செல்வம்..! புகழாரம் சூட்டி பேசிய தற்காலிக சபாநாயகர்..! 

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

 Puducherry Speaker BJP Selvam


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி பதவியேற்றுள்ளார். பாஜகவைச் சேர்ந்த ஏம்பலம் செல்வம் கூட்டணி சார்பில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி முன்மொழிய , பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் வழிமொழிய, 9 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் செல்வம் வேட்பாளராக போட்டியிட மனுதாக்கல் செய்தார்.  


15ஆம் தேதி மதியம் 12 மணிவரை மனு தாக்கல் செய்ய கால அவகாசம் இருந்தும், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஏம்பலம் செல்வம் சபாநாயகராக தேர்வானது உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலாவது சட்டமன்றக் கூட்டத்தை நேற்று (16.06.2021) தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் திருக்குறள் வாசித்து தொடங்கிவைத்தார். பின்னர் செல்வம் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.


அதையடுத்து சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஏம்பலம் செல்வத்தை சபாநாயகர் இருக்கையில் வந்து அமருமாறு தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் அழைப்பு விடுத்தார். செல்வத்தை அவை முன்னவர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

 

 Puducherry Speaker BJP Selvam

 

"புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், 1964ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி  மங்கலட்சுமி - ரங்கநாதன் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், மக்கள் பணியில் அக்கறைகொண்டு செயல்பட்டுவந்துள்ளார். ஏம்பலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக 6 ஆண்டுகள் பதவி வகித்து, சிறந்த கூட்டுறவு சங்கத்திற்கான விருதைப் பெற்றுள்ளார். அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவராக மூன்றாண்டுகள் திறம்பட பணியாற்றியுள்ளார். பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவராக பணியாற்றியபோது கல்லூரியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

பொதுமக்கள் துயர் துடைக்கும் வகையில் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். புதுச்சேரி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளார். பூப்பந்தாட்ட சங்கத் தலைவர், நெட் பால் சங்கத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்துள்ளார்.  இத்தகைய சிறப்புமிக்க செல்வம், புதுச்சேரி அரசின் 21வது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதற்கு இந்தச் சட்டசபை பெருமைகொள்கிறது. 

 

பேரவைத் தலைவர் பதவியில் அனைவரின் நம்பிக்கையையும் பெற்று,  நடுநிலை தவறாமல் தீர்ப்புகளைக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்பார்க்கிறார்கள். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களோடு இணைந்து ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நடந்துகொள்வார் என்று நம்புகிறோம். இத்தகைய சிறப்புமிக்க சட்டப்பேரவையின் நம்பிக்கையையும், மதிப்பையும், மரியாதையும் தான் வகிக்கும் பொறுப்பினையும் மேலும் பெருமைக்குரியதாக மாற்றுவார் என நம்புகிறோம்"  என முன்னதாக தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன், புதிய சபாநாயகர் செல்வம் பற்றி குறிப்பிட்டார்.

 

புதிய சபாநாயகராக பொறுப்பேற்ற ஏம்பலம் செல்வத்தை எம்.எல்.ஏக்கள் அங்காளன், நாஜிம், சாய் சரவணகுமார், நமச்சிவாயம் வைத்தியநாதன், சிவா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி பாட்டு பாடிய ஜப்பானிய ரசிகர் - வீடியோ வைரல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
japanese sing rajinikanth muthu movie song

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மாணவர்களுக்கான பன்னாட்டு வணிகத்துறை சார்பில் தொழிற்சாலை - கல்வி நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மொத்தம் மூன்று நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் கலந்து கொண்டார். 

அப்போது நடந்த கருத்தரங்கில் தமிழ் மொழி குறித்து பேசிய அவர், தமிழ் தனக்கு நன்றாகவே தெரியும் என்றும், தமிழ் சினிமா பாடலும் பாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இறுதியாக ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி...’ பாடலை முழுவதுமாக பாடி அசத்தினார். அதை அங்கிருந்த மாணவர்கள் உள்பட அனைவருகளும் கைதட்டி ரசித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் ஜப்பானில் மட்டும் 180க்கும் மேற்பட்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அங்கு வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.