Prime Minister Modi intensive lobbying in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6 ஆவது முறையாகப் பிரதமர் மோடி நேற்று (09.04.2024) சென்னை வந்தடைந்தார். 2 நாள் பயணமாகத் தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னை, வேலூர் மற்றும் நீலகிரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். பயணத் திட்டத்தின் படி கேரள மாநிலம் பாலக்காட்டில் தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு நேற்று மாலை பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை தியாகராயர் நகரில் பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி (ரோடு ஷோ) மேற்கொண்டார்.

Advertisment

Prime Minister Modi intensive lobbying in Tamil Nadu

அப்போது தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி. செல்வத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பிரதமர் மோடி பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்காக தி.நகரில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். இந்நிலையில் இன்று (10.04.2024) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூருக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.

அதன் பின்னர் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு பாஜக சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அதன் பின்னர் அரக்கோணத்தில் இருந்து விமானம் மூலம் பிற்பகல் 01.30 மணிக்குக் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதன் பின்னர் பிரதமர் மோடி மகாராஷ்டிரா புறப்பட்டுச் செல்கிறார். மேலும் ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று தினங்களில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகைபுரிந்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisment