Skip to main content

தேர்தலில் வெற்றிபெற கோவில் கோவிலாக யாகம்! பதற்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ..!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

Prayer in temple to win the election! ADMK MLA in tension ..!


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தேன்மொழி, தேர்தலுக்குப் பின் கோவில் கோவிலாகச் சென்று யாகங்கள் நடத்துவதாகவும், ஒருவித பதற்றத்தில் இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

 

நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. தேன்மொழியும், திமுக கூட்டணி கட்சியின் முருகவேல் ராஜனும் போட்டி போட்டுள்ளனர். இதில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான தேன்மொழி, ஆரம்பத்தில் எளிதாக வெற்றிபெறக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், நிலக்கோட்டை தேர்தல் களம் இறுதியில் கடினமாகி வாழ்வா சாவா என மாறிப் போனதால் கடும் மன உளைச்சலில் இருந்தாராம் தேன்மொழி. தேர்தல் களத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் முருகவேல் ராஜனின் பிரச்சாரம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் சொந்தக் கட்சியினரின் உள்குத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடியுள்ளார். 

 

கடைசி கட்டத்தில் திமுக பணப் பட்டுவாடா செய்யவில்லை என தெரிந்ததும் மன நிம்மதி அடைந்த தேன்மொழி, தன் கணவர் சேகர் மூலம் முழுவீச்சில் தொகுதி முழுவதும் ரூ. 500 என பட்டுவாடாவுக்கு தயார் செய்து அனுப்பினார். பணம் போன வத்தலக்குண்டு ஒன்றியத்தில், முக்கிய நிர்வாகிகள் ரூ.10 லட்சத்தை சுவாகா செய்துவிட்டு, காணவில்லை என சத்தியம் செய்ய மீண்டும் கொடுத்திருக்கிறார் தேன்மொழி. 

 

இது தொடர்பாக நத்தம் விஸ்வநாதனிடம் புகார் கொடுத்துவிட்டு, பட்டுவாடா பணிகளில் கவனம் செலுத்திய தேன்மொழிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது. நிலக்கோட்டை வத்தலக்குண்டு பகுதியில் உள்ள பைக் ஷோரூம்களில் அதிமுகவினர் புதிதாக பைக்குகளை புக் செய்திருப்பதாகவும், எலக்ட்ரானிக் கடைகளில் இருபதுக்கும் மேற்பட்ட எல்.இ.டி. டிவி விற்பனையாகி இருப்பதாகவும் தகவல் கிடைக்கவே அதிர்ந்துபோனார். கொடுத்த பணம் 70 சதவீதத்தை 45 சதவீதம் மட்டுமே தொகுதியில் பட்டுவாடா செய்யப்பட்டிருப்பது கண்டு மனம் நொந்துபோனார்.

 

‘அக்கா தேன்மொழி பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க’ என திமுக வேட்பாளரின் பிரச்சாரமும் மக்களிடம்  நன்றாக எடுபட்டிருந்தது. இதனால், ஏப்ரல் 6ஆம் தேதி விழுந்த வாக்குகள் பெரும்பாலானவை இரட்டை இலைக்கு விழுந்ததா? அல்லது திமுக வேட்பாளரின் வேண்டுகோளை மக்கள் ஏற்றுக்கொண்டு மாற்றி ஏதும் போட்டுவிட்டார்களா? என ஆழ்ந்த சிந்தனையில் இருந்த தேன்மொழி, தற்போது கோவில் கோவிலாகச் சென்று யாகம் வளர்த்து வருகிறார். அதோடு உளவுத்துறை ரிப்போட்டிலும்கூட நிலக்கோட்டை தொகுதி இழுபறி தொகுதி என கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் சிட்டிங் எம்.எல்.ஏ.வான தேன்மொழி மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் கோவில்களில் யாகம் நடத்திவருகிறார் என்ற பேச்சும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.