Skip to main content

‘கருணையிலே வள்ளலார்! கோபத்திலே அய்யனார்! குணத்தினிலே எம்.ஜி.ஆர்.!’ -போஸ்டர்களில் ‘கெத்து’ காட்டும் அமைச்சர்கள்!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

 

சுவர்களில் காணப்படும் வால்போஸ்டர்கள் ஒவ்வொன்றும் ஒரு சேதி சொல்லும். அவற்றில் இடம்பெற்றுள்ள வாசகங்களுக்குள் ஊடுருவினால், ‘உண்மை’ பளிச்சிடும்! அதுபோன்ற சில போஸ்டர்களை பார்ப்போம்!

 

‘இன்றுமுதல் செல்லூர் ராஜூ.. மதுரை மீண்ட சுந்தரபாண்டியர்!’ என்னும் தலைப்பில், போஸ்டர்   மூலம் அவரது விசுவாசிகள்  வெளிப்படுத்திய ‘கரோனா கொண்டாட்டம்’ குறித்து, கடந்த 18-ஆம் தேதி, நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். 

 

அந்த கட்டுரையில், பாமரர்கள் பலருக்கும் புரியாதபடி, செல்லூர் ராஜு ஆதரவாளர்கள், போஸ்டரில் நீட்டி முழக்கி சொன்ன விஷயத்தை, 57 வருடங்களுக்கு முன்பே, ‘தர்மம் தலைகாக்கும்..’ என்று பாட்டாகவே பாடிவிட்டார் எம்.ஜி.ஆர். என்று குறிப்பிட்டிருந்தோம். 

 

நக்கீரன் இணைய செய்தி செல்லூர் ராஜு ஆதரவாளர்களின் கண்ணில்பட, ‘மக்களுக்கு புரியும் விதத்தில் சிம்பிளாக சொல்வோமே!’ என்று யோசித்து, ‘செய்த தர்மம் தலைகாக்கும்..’ என்று புதிய டிசைனில், தற்போது போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். மேலும், கிறிஸ்தவ, இஸ்லாமிய வாக்காளர்களைக் கவரும் விதத்தில், தேவாலயம், மசூதி படங்களின் பின்னணியிலும் போஸ்டர்கள் முளைத்துள்ளன.

 

முன்பெல்லாம், அதிமுக தலைமையைத்தான் ‘குலசாமி’ என்று போஸ்டரில் குறிப்பிடுவார்கள். இன்றோ, செல்லூர் ராஜுவை ‘குலசாமி’ ஆக்கி, அதற்கு விளக்கம் வேறு தருகின்றனர். தமிழகத்தின் குலசாமி ஜெயலலிதா என்றால், மதுரை மேற்கு தொகுதியின் குலசாமி செல்லூர் ராஜு என்கிறார்கள்.  

 

அமைச்சர் செல்லூர் ராஜுவுக்குப் போட்டியாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர்கள், அவரை ‘வள்ளலார்’ என்றும் ‘அய்யனார்’ என்றும் போஸ்டர்களில் துதி பாடுகின்றனர். எப்படி தெரியுமா, ‘கருணையிலே வள்ளலார்!  கோபத்திலே அய்யனார்! குணத்தினிலே எம்.ஜி.ஆர்.!’ என, மதுரை புறநகர் மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். 

 

மதுரையில் திமுக போஸ்டர்கள் எங்கேனும் தென்படுகின்றனவா என்று தேடினால், ‘அண்ணன் மு.க.அழகிரியை ஒருமையில் திட்டாதீர்கள்! திமுகவை அவதூறாக பேசாதீர்கள்!’ என்று முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா போன்ற அரசியல் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர், அவரது ஆதரவாளர்கள். 

 

விருதுநகரில், மு.க.ஸ்டாலின், மா.செ.க்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு மற்றும் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (திமுக) எம்.எல்.ஏ., படங்களைப் போட்டு, இரண்டு டிசைன்களில் போஸ்டர் ஓட்டியிருந்தனர். அது என்ன போஸ்டர் தெரியுமா, விருதுநகர் ஏ.டி.பி. காம்பவுண்டு, 3-வது மற்றும் 4-வது தெரு பகுதிகளின் நீண்டநாள் பிரச்சனையாம்.. அந்த குடிதண்ணீர் பிரச்சனையை சரிசெய்ய, ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், எம்.எல்.ஏ.  நகராட்சி அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தாராம். அதற்கு உறுதுணையாக இருந்தாராம், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.பி.மதியழகன். அதற்கு நன்றி தெரிவிக்கவே இந்த போஸ்டர்களாம்! குடிதண்ணீர் பிரச்சனை சரியாவதற்கு முன்பே நன்றி அறிவிப்பு போஸ்டர்கள்! பலே! பலே!

 

பேனர்கள் விஷயத்தில் சட்டம் கறாராக இருப்பதால் வால்போஸ்டர்கள், அரசியலை வாழவைக்கின்றன! 

 

 

சார்ந்த செய்திகள்