Skip to main content

பிஜேபி வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு...!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

Police register case against BJP candidate

 

விழுப்புரம் மாவட்ட பிஜேபி கட்சித் தலைவராக இருப்பவர் கலிவரதன். இவர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதி அதிமுக கூட்டணியில் பிஜேபி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் மீது திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவரது மனைவி (30) செல்லம்மாள் என்பவர் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் வேட்பாளர் கலிவரதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பத்துப் பேர் தங்கள் வீட்டுக்கு வந்து  கொலை மிரட்டல் செய்ததாக புகார் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து செல்லம்மாள் தனது புகாரில், “கடந்த 8ஆம் தேதி காலை 11 மணிக்கு எனது கணவர் பிரபுவை செல்ஃபோனில் தொடர்பு கொண்டார் பாஜக வேட்பாளர் கலிவரதன். அப்போது என் கணவரிடம் தேர்தல் எப்படி நடந்தது, வாக்குப்பதிவு அன்று உங்கள் ஊரில் எந்த அளவுக்கு வாக்குகள் பதிவானது, அதில் நமது தாமரை சின்னத்திற்கு அதிக வாக்குகள் விழுந்தனவா என்று விசாரித்தார். அப்போது எனது கணவர் தாமரைக்கு ஓட்டுக்கள் குறைவாகத்தான் பதிவாகியிருக்கும் என்றார். இதைக் கேட்ட கலிவரதன் செல்ஃபோனிலேயே எனது கணவரை ஆபாசமாக திட்டினார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு எனது கணவர் வெளியே சென்றுவிட்டார்.

 

இந்த நிலையில், அன்று இரவு 8.30 மணி அளவில் கலிவரதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் கொண்ட கும்பல், கையில் கம்பு தடிகளுடன் எங்களது வீட்டிற்குள் புகுந்து என் கணவரைத் தாக்குவதற்கு தேடினார்கள். அவர் அங்கு இல்லை. அப்போது, அவர்களை நான் தடுக்க முயன்றபோது என்னை ஆபாசமாக திட்டி, தடியைக் காண்பித்து அடித்துக்கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்து விட்டுச் சென்றனர்.” இவ்வாறு செல்லம்மாள் அவரது புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கலிவரதன் மற்றும் அடையாளம் தெரியாத அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 147, 294, 506 (1) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர்.

 

கும்பலாக கூடி அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு கடந்த 8ஆம் தேதி திருக்கோவிலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து பிஜேபி வேட்பாளர் கலிவரதன் தலைமையில் அதிமுக, பாமக மற்றும் பிஜேபி கூட்டணிக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து முக்கிய கட்சி பிரமுகர்களுடன் விபரங்கள் சேகரித்துள்ளனர். அந்தக் கூட்டத்திற்கு வருமாறு சிறுவனூர் பிரபுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் அவர் அந்தக் கூட்டத்திற்கு செல்லவில்லை என்றும் மேலும் தேர்தல் சமயத்தில் வாக்குகளைப் பெறுவதற்கான பரிவர்த்தனை கிராமம்தோறும் நடைபெற்றுள்ளது. அதைக் கட்சியினர் முறையாக செய்துள்ளனர் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் தொகுதி வாக்குகள் பிஜேபியின் தாமரை சின்னத்திற்கு அதிக அளவில் கிடைக்கவில்லை என்ற கோபம்தான் இந்தக் கொலை மிரட்டல் புகாருக்கு காரணமென்று அதிமுக, பாமக, பிஜேபி ஆகிய கூட்டணிக் கட்சியினர் கூறுகின்றனர். இதன் அடிப்படையிலேயே பிரபுவின் வீட்டுக்குள் புகுந்து மிரட்டல் விடுத்துள்ளனர். பிஜேபி வேட்பாளர் கலிவரதன், முன்பு பாமக சார்பில் முகையூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றிபெற்றவர். அதன் பிறகு பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து, தற்போது பிஜேபி கட்சியில் உள்ளார். மேலும், இவர் எம்எல்ஏவாக இருந்தது முதல் தற்போது வரை அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகள் மூலம் பரபரப்பாக பேசப்படும் அளவிற்கு அவரது செயல்பாடுகளும் இருந்து வருகின்றன என்கிறார்கள் தொகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.