Skip to main content

“நாம் ஆண்ட பரம்பரை  வழியில் வந்தவர்கள்; அடுத்தவர்களுக்கு துதி பாடிக்கொண்டிருக்கிறோம்..” - பாமக கூட்டத்தில் ராமதாஸ் 

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

PMK Ramadoss speech at cuddalore pmk executive meeting

 

பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது; “நாம் யாருக்குப் போராடி இடஒதுக்கீடு பெற்று தந்தோமோ, அந்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு மேல்முறையீடு செய்து சரியாகவே செயல்படுகிறது. நல்ல வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கான தடை உத்தரவு கிடைக்கும் என நிச்சயமாக நாம் நம்புகிறோம்.

 

தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டும், அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு வீடாகச் சென்று திண்ணை திண்ணையாக இளைஞர்கள் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். தமிழகத்தில் 60 இடங்களில் சுலபமாக வெற்றிபெற்றால் அன்புமணி ராமதாஸ் முதல்வராகி ஆள முடியும். அன்புமணி போல ஒரு திறமையானவர் யாரும் இல்லை, ஏன் மக்கள் ஆட்சியைக் கொடுக்க தயங்குகிறார்கள்.? வஞ்சகம் உள்ள கட்சிகளுக்கு வாக்கு போட்டுவிட்டீர்கள். ஒருமுறை பாமகவிற்கு வாக்கு சொலுத்துங்கள் என மக்களிடம் பிரச்சாரம் செய்யுங்கள். அதேபோல் சமூக வலைதளங்கள் மூலமும் பிரச்சாரம் செய்யுங்கள். அப்படி செய்யும்போது பாமக ஆட்சிக் கட்டிலை நோக்கிச் செல்லும், கோட்டையில் பாமக கொடி பறக்கும். அதை நோக்கி யூகங்கள், உழைப்புகள் இருக்க வேண்டும். இளைஞர்கள் வானத்தை வில்லாக வளைக்கலாம், மலையைத் தவிடுபொடியாக்கலாம். அன்புமணியை கோட்டையில் அமரவைப்பது உங்கள் கையில் உள்ளது. அன்புமணியை கோட்டையில் அமரவைப்போம் என உறுதியேற்றுக்கொள்ளுங்கள். 

 

இனிவரும் காலங்களில் ஒரு தொகுதியில் 1 லட்சம் வாக்குகளைப் பாமக பெற வேண்டும். 1 பூத்தில் ஆயிரம் வாக்குகளைப் பெற வேண்டும். நாம் ஆண்ட பரம்பரை வழியில் வந்தவர்கள். இன்று அடுத்தவர்களுக்கு நாம் துதி பாடிக்கொண்டிருக்கிறோம். பாட்டாளி மக்கள் கட்சி 2016இல் தனியாக நின்று வெறும் 23 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். தலைவர் சொல்கிறார், நாம் 5.6% வாக்குகள் பெற்று 3வது பெரிய கட்சியாக இருக்கிறோம் என்று. எனக்கு வெட்கமாக இருக்கிறது; வேதனையாக உள்ளது.  60 லட்சம் வாக்குகள் பெற உழைக்கவில்லை.

 

42 ஆண்டுகள் மக்களுக்காகப் பாடுபட்டிருக்கிறேன். உங்களுக்காக குரல் கொடுக்க நான் ஒருவன் இன்னும் உயிருடன் இருக்கிறேன். வயதானவர்கள் பேசத்தான் முடியும், இனி இந்தக் கட்சி இளைஞர்களை நம்பித்தான் உள்ளது. கடலூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை என்று சொல்லியிருந்தால் அந்தமானிலிருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்திருப்பேன்.

 

வீட்டில், கரோனாவிலிருந்து வயதானவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கோவிந்தராஜ் வழக்கை நான் கையில் எடுத்திருக்கிறேன்,. நிச்சயமாக தவறு செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்கும். காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வியை தழுவியுள்ளது பாமக. இதற்குக் காரணம் மாவட்டச் செயலாளர்கள்தான். உங்களால் முடியவில்லை என்றால், ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் 1 லட்சம் வாக்கு வாங்க முடியுமா என்று கேட்பேன். அவன் முடியும் என்று சொன்னால் அவனையே மாவட்டச் செயலாளராக போட்டுக்கொள்வேன்.” இவ்வாறு அவர் பேசினார். 

 

கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.