Skip to main content

"ஒரு கோடி பெண்களுக்கு உரிமைத் தொகையை மறுப்பது நியாயமல்ல" - ராமதாஸ்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

pmk founder ramadoss press release for tamil nadu budget 

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (20.03.2023) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து துறைவாரியான அறிவிப்புகளை வெளியிட்டார்.

 

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம், காலை உணவு விரிவாக்கத் திட்டம், வளமிகு வட்டாரங்கள் திட்டம் ஆகியவை வரவேற்கத்தக்கவை. அதே நேரத்தில் முதன்மைத் தேவைகளான வேலைவாய்ப்பு மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

 

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாதது கடும் எதிர்ப்புகளுக்கு ஆளான நிலையில், இப்போது அந்தத் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தகுதியுடைய பெண்களுக்கு மட்டும் தான் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், தங்களுக்கு இந்த நிதி கிடைக்காதோ என்ற ஐயம் பல பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

 

குடும்பத்தலைவிகள் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ.7000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் 7 மாதங்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்பதால், மாதம் ரூ.1000 கோடி செலவு செய்யப்படும். அதன்படி ஒரு கோடி பெண்களுக்கு மட்டும் தான் இந்தத் திட்டத்தின் பயன் கிடைக்கும். தமிழ்நாட்டில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 2.11 கோடி ஆகும். அதில் 1.11 கோடி குடும்பங்களின் தலைவிகளுக்கு உரிமைத் தொகையை மறுப்பது நியாயமல்ல. தமிழ்நாட்டின் சிறப்புகளில் ஒன்று அனைவருக்கும் குடிமைப் பொருட்கள் வழங்கும் மாநிலம் என்பதாகும். அந்த அடிப்படையில் உரிமைத் தொகையும் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

 

தமிழ்நாட்டில் 1543 பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம் 30,122 தொடக்கப்பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்படும், ஒரு லட்சம் பேருக்கு கூடுதலாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படும், சென்னையில் அடையாறு மறுசீரமைப்புத் திட்டம் ரூ.1500 கோடியிலும், தீவுத்திடல் சதுக்கம் திட்டம் ரூ.50 கோடியிலும் செயல்படுத்தப்படும், பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் புத்தொழில் திட்டம் (Women Start-Up) தொடங்கப்படும், 54 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் ரூ.2,783 கோடி செலவில் திறன்மிகு நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களும் வரவேற்கத்தக்கவை.

 

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வளமிகு வட்டாரங்கள் திட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் திட்டம் ஆகும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான வட மாவட்டங்கள், மலைப் பகுதிகள், இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் பல கூறுகளில் பின்தங்கியிருப்பதால், அவற்றை பின்தங்கிய பகுதிகளாக அறிவிக்க வேண்டும்; அவற்றின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 371கே என்ற புதிய பிரிவைச் சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. கருத்துரு அளித்திருந்தது. ஆனால், தமிழக அரசு 50 பின்தங்கிய வட்டங்களைக் கண்டறிந்து அவற்றில் தலா ரூ.5 கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இவ்வளவு குறைவான நிதியைக் கொண்டு எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியாது. எனவே, இதை ஒரு நல்லத் தொடக்கமாக வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் பின்தங்கிய பகுதிகள் முன்னேற்றத்திற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 371கே என்ற புதிய பிரிவைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மொழிப்போர் ஈகியர்கள் தாளமுத்து மற்றும் நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழ் வழிக்கல்வியைக் கட்டாயமாக்குதல், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குதல், தமிழை பள்ளியிறுதி வரை கட்டாயப் பாடமாக்குதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.77 ஆயிரம் கோடியில் 14,500 மெகாவாட் நீரேற்று மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, அதற்கு அருகிலுள்ள அரியலூர் மாவட்டத்திற்கான சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது. நிதிநிலை அறிக்கையில் எந்தவொரு பாசனத் திட்டமுமே அறிவிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

 

தமிழ்நாட்டில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான எந்தத் திட்டமும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்குவது குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அரசு ஊழியர்களுக்கான பழைய  ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம் பெறாதது அவர்களை கவலையடையச் செய்துள்ளது.

 

தமிழக அரசு நடப்பாண்டில் ரூ.1,43,197 கோடி மொத்த கடன் வாங்க முடிவு செய்திருக்கிறது. அதையும் சேர்த்தால், தமிழகத்தின் மொத்தக்கடன் ரூ.7,26,028 கோடியாக உயரும். அதாவது ஒவ்வொருவர் பெயரிலும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் கடன் இருக்கும். பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் இது ஒன்றரை லட்சம் ரூபாயாக அதிகரிக்கும். 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1,81,182.22 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் ரூ.50,000 கோடி மது வணிகத்தின் மூலமாக கிடைக்கும் என்பது தமிழகத்தின் வலுவற்ற பொருளாதார கட்டமைப்பையே காட்டுகிறது. இத்தகைய குறைகளைக் களைந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அதிக எண்ணிக்கையில் செயல்படுத்தவும், நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.