Skip to main content

“உளவு பார்த்தது தேசத் துரோகச் செயல்..” - புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் காட்டம்

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

Pegasus issue pondicherry congress members struggle

 

இஸ்ரேல் நாட்டு உளவு பார்க்கும் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா, மம்தா பானர்ஜி, பிரசாந்த் கிஷோர் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மத்திய அமைச்சர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் செல்ஃபோன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. இந்த செல்ஃபோன் ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடத்தப்பட்டுவருகிறது.

 

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தைக் கண்டித்தும், அதற்கு காரணமான மத்திய பாஜக அரசின் முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நீதி விசாரணை நடத்தக் கோரியும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி கண்டன பேரணி நடைபெற்றது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.எஸ். சுப்பிரமணியம் தலைமையில், காமராஜர் சிலை அருகில் இருந்து பேரணியாக புறப்பட்ட காங்கிரஸார், நேரு வீதி வழியாக ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன முழக்கங்களை எழுப்பி சென்றனர்.

 

Pegasus issue pondicherry congress members struggle

 

அவர்களை சட்டப்பேரவை அலுவலகம் அருகே ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து காங்கிரஸார் அங்கு மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், நீதி விசாரணை நடத்தக் கோரியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், "நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள், அமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசியை மென்பொருள் மூலம் உளவு பார்த்த விவகாரம் தேசத் துரோகச் செயல் ஆகும். இந்த நிகழ்வு கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து நடந்திருப்பதாக சொல்லப்படுவதால் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததிலுமே முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. வெளிநாடுகளுக்கும் நமது நாட்டின் ரகசியங்கள் கசிந்திருக்கலாம்.

 

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கிய நிலையில், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய பெண்ணின் செல்லிடப்பேசியும் உளவு பார்க்கப்பட்டிருப்பதால்தான் பாஜக இந்த உளவு வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. எனவே பெகாசஸ் விவாகரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும். இந்த முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்"  என்றார்.

 

இந்த பேரணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், மாநில துணைத்தலைவர்கள் பீ.கே. தேவதாஸ், பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் நீல. கங்காதரன், ஆர்.கே.ஆர். அனந்தராமன்,  சிறப்பு அழைப்பாளர் சுந்தரவடிவேலு, பொதுச் செயலாளர்கள் கலாநிதி, அப்துல்ரகுமான், மகளிரணி தலைவர் மச்சகாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.