Skip to main content

“தொண்டர்களின் மூச்சுக்காற்றால் பதர்கள் தூக்கி எறியப்படும்..” - இ.பி.எஸ். அணியை விமர்சித்த பண்ருட்டி ராமச்சந்திரன்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

panruti ramachandran addressed press

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை இ.பி.எஸ். அறிவித்து, இன்று முதல் ஆளாய் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி.எஸ். ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “சற்றும் எதிர்பார்க்காத வகையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்திருக்கிறார். இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என நாங்கள் கருதுகிறோம். தேர்தல் என்றால் முறைப்படி வாக்காளர் பட்டியல், வேட்பாளர்களுக்கு உரிய கால அவகாசம், தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல் போன்ற விஷயங்களோடு தான் நடைபெற வேண்டும். ஆனால், திடீர் சாம்பார், திடீர் ரசம் என்பது போல இவர்கள் ஒரு தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். அதிமுக என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருக்கும் மாபெரும் இயக்கம். அந்த இயக்கத்தின் தேர்தலை முறைப்படி நடத்த சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி தான் நடக்க வேண்டும். 

 

நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அதற்கு மாறாக தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சட்ட விதிகளை மாற்றுவதோ அல்லது திடீர் தேர்தலை அறிவிப்பதோ மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல். இதனை நாங்கள் கண்டிக்கிறோம். சட்ட ரீதியாக இதனைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். அவர்களின் இந்தச் செயல் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. நான் எம்.ஜி.ஆரின் இறுதி மூச்சு வரை உடன் இருந்தவன்; அதேபோல், ஓ.பி.எஸ். ஜெயலலிதாவின் இறுதி மூச்சு வரை உடன் இருந்தவர். அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நாங்கள் இருந்தோம். ஆகவே இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் ஆரம்பத்திலிருந்து இந்த இயக்கத்தின் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒன்றிணைய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதற்கு மாறாக எடப்பாடி தரப்பினர் இந்த இயக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். 

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த பாடத்தைக் கூட அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை; திருந்தவில்லை. எம்.ஜி.ஆர். மொழியில், ‘திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்’ என்று சொல்லலாம். அவர்கள் திருந்துவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட, வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தை இன்னும் வலுவாக்க அவர்களால் வளர்க்கப்பட்ட நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த இயக்கம் இப்படி அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறதே என உண்மையான தொண்டர்கள் மத்தியில் ஏக்கம் இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் நம்பிக்கையூட்டும்படி நான் சொல்வது, இந்த இயக்கத்தை முறைப்படி நடத்தவும், நிர்வாகிகளை முறைப்படி தேர்ந்தெடுக்கவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்து தந்த சட்ட விதியின்படி செயல்படுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இதில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். விரைவில் இதற்கான ஏற்பாடுகளை செய்யவிருக்கிறோம். இனியும் இவர்கள் திருந்துவார்கள் என்றோ, ஒன்றாக வருவார்கள் என்றோ நாங்கள் நினைக்கவில்லை, எதிர்பார்க்கவுமில்லை. அதைப் பற்றி பொருட்படுத்தவும் போவதில்லை. 

 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரைப் பயன்படுத்த அனுமதி தந்தோம். இரட்டை இலை சின்னத்தை தந்தோம். எங்கள் வேட்பாளரை திரும்பப் பெற்றோம். இந்த இயக்கம் மீண்டு வரவேண்டுமென அத்தனையும் தந்தும் கூட அவர்கள் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள் என்றால் அவர்களைப் பற்றி நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் உணர்ந்தாக வேண்டும். தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும். நமக்கான நேரம் வந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தை மீட்டெடுக்கப் போகிறோம்.

 

இதுவரை இவர்கள் ஒன்றாவார்கள் எனச் சட்டப்போராட்டம், நீதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். தற்போது ஒரு முடிவு எடுத்துள்ளோம். இந்த இயக்கத்தை மீட்டெடுக்க அவர்களைப் பொருட்படுத்தவோ, கவலைப்படவோ போவதில்லை. விரைவில் நம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் மாவட்டந்தோறும் தொண்டர்களைச் சந்திக்க இருக்கின்றனர். 

 

சிறுபிள்ளைகள் மணல் வீடு கட்டுவதைப் போல இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு இயக்கத்தின் தொன்மையையும், அதன் வரலாற்றையும், அதன் தியாகத்தையும், அதற்காக தலைவர்கள் எவ்வாறு பாடுபட்டார்கள் என்பதையும், மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதையும் அறவே உணராத ஒரு சிறுபான்மை கூட்டத்திடம் சிக்கித் தவிக்கிறது இந்த இயக்கம். தொண்டர்களின் மூச்சுக்காற்றால் பதர்கள் தூக்கி எறியப்படுவார்கள். அழகான நெல்மணிகள் அப்படியே நிற்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணியுங்கள்” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.