Skip to main content

“தொண்டர்களின் மூச்சுக்காற்றால் பதர்கள் தூக்கி எறியப்படும்..” - இ.பி.எஸ். அணியை விமர்சித்த பண்ருட்டி ராமச்சந்திரன்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

panruti ramachandran addressed press

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை இ.பி.எஸ். அறிவித்து, இன்று முதல் ஆளாய் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி.எஸ். ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “சற்றும் எதிர்பார்க்காத வகையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்திருக்கிறார். இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என நாங்கள் கருதுகிறோம். தேர்தல் என்றால் முறைப்படி வாக்காளர் பட்டியல், வேட்பாளர்களுக்கு உரிய கால அவகாசம், தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல் போன்ற விஷயங்களோடு தான் நடைபெற வேண்டும். ஆனால், திடீர் சாம்பார், திடீர் ரசம் என்பது போல இவர்கள் ஒரு தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். அதிமுக என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருக்கும் மாபெரும் இயக்கம். அந்த இயக்கத்தின் தேர்தலை முறைப்படி நடத்த சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி தான் நடக்க வேண்டும். 

 

நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அதற்கு மாறாக தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சட்ட விதிகளை மாற்றுவதோ அல்லது திடீர் தேர்தலை அறிவிப்பதோ மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல். இதனை நாங்கள் கண்டிக்கிறோம். சட்ட ரீதியாக இதனைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். அவர்களின் இந்தச் செயல் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. நான் எம்.ஜி.ஆரின் இறுதி மூச்சு வரை உடன் இருந்தவன்; அதேபோல், ஓ.பி.எஸ். ஜெயலலிதாவின் இறுதி மூச்சு வரை உடன் இருந்தவர். அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நாங்கள் இருந்தோம். ஆகவே இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் ஆரம்பத்திலிருந்து இந்த இயக்கத்தின் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒன்றிணைய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதற்கு மாறாக எடப்பாடி தரப்பினர் இந்த இயக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். 

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த பாடத்தைக் கூட அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை; திருந்தவில்லை. எம்.ஜி.ஆர். மொழியில், ‘திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்’ என்று சொல்லலாம். அவர்கள் திருந்துவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட, வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தை இன்னும் வலுவாக்க அவர்களால் வளர்க்கப்பட்ட நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த இயக்கம் இப்படி அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறதே என உண்மையான தொண்டர்கள் மத்தியில் ஏக்கம் இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் நம்பிக்கையூட்டும்படி நான் சொல்வது, இந்த இயக்கத்தை முறைப்படி நடத்தவும், நிர்வாகிகளை முறைப்படி தேர்ந்தெடுக்கவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்து தந்த சட்ட விதியின்படி செயல்படுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இதில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். விரைவில் இதற்கான ஏற்பாடுகளை செய்யவிருக்கிறோம். இனியும் இவர்கள் திருந்துவார்கள் என்றோ, ஒன்றாக வருவார்கள் என்றோ நாங்கள் நினைக்கவில்லை, எதிர்பார்க்கவுமில்லை. அதைப் பற்றி பொருட்படுத்தவும் போவதில்லை. 

 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரைப் பயன்படுத்த அனுமதி தந்தோம். இரட்டை இலை சின்னத்தை தந்தோம். எங்கள் வேட்பாளரை திரும்பப் பெற்றோம். இந்த இயக்கம் மீண்டு வரவேண்டுமென அத்தனையும் தந்தும் கூட அவர்கள் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள் என்றால் அவர்களைப் பற்றி நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் உணர்ந்தாக வேண்டும். தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும். நமக்கான நேரம் வந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தை மீட்டெடுக்கப் போகிறோம்.

 

இதுவரை இவர்கள் ஒன்றாவார்கள் எனச் சட்டப்போராட்டம், நீதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். தற்போது ஒரு முடிவு எடுத்துள்ளோம். இந்த இயக்கத்தை மீட்டெடுக்க அவர்களைப் பொருட்படுத்தவோ, கவலைப்படவோ போவதில்லை. விரைவில் நம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் மாவட்டந்தோறும் தொண்டர்களைச் சந்திக்க இருக்கின்றனர். 

 

சிறுபிள்ளைகள் மணல் வீடு கட்டுவதைப் போல இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு இயக்கத்தின் தொன்மையையும், அதன் வரலாற்றையும், அதன் தியாகத்தையும், அதற்காக தலைவர்கள் எவ்வாறு பாடுபட்டார்கள் என்பதையும், மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதையும் அறவே உணராத ஒரு சிறுபான்மை கூட்டத்திடம் சிக்கித் தவிக்கிறது இந்த இயக்கம். தொண்டர்களின் மூச்சுக்காற்றால் பதர்கள் தூக்கி எறியப்படுவார்கள். அழகான நெல்மணிகள் அப்படியே நிற்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணியுங்கள்” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.