Skip to main content

தி.மு.க.வில் ஒரு தொண்டன் முதல்-அமைச்சராக வர முடியுமா? ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

Published on 11/05/2019 | Edited on 11/05/2019


 

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார் துணை முதல் அமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்.

 

O. Panneerselvam



அப்போது அவர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற தீராத ஆசையில் உள்ளார். அவர் முதல்-அமைச்சராக எந்த காலத்திலும் வர முடியாது. அ.தி.மு.க. இந்த தேர்தலில் காணாமல் போய்விடும் என்று கூறுகிறார். அ.தி.மு.க. மிகப்பெரிய ஆலமரம். இதில் 1 கோடி தொண்டர்கள் உள்ளனர். கலைஞரால் முடியாதது, உங்களால் முடியவே முடியாது. 
 

தி.மு.க. ஆட்சியில் கொலை, நிலஅபகரிப்பு நடந்தது. அந்த நிலத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீட்டு மக்களிடம் தந்தார். மின்சார தட்டுப்பாட்டை போக்க முடியாத அரசாக தி.மு.க. அரசு இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு மின்மிகை மாநிலமாக மாற்றினார். தற்போது 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

 

இந்த தேர்தல் யாரால் வந்தது, நம்மிடம் இருந்து சென்ற துரோகியால் வந்தது. அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வுடன், கூட்டணி வைத்து இருப்பதாக ஒருவர் கூறுகிறார். இந்த கட்சியில் இருந்து வசதி வாய்ப்பை பெருக்கி கொண்டவர்கள் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க போகிறார்களாம். அது எந்த காலத்திலும் முடியாது. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து தனிக்கட்சி கண்டவர்கள், சாதிக் கட்சி கண்டவர்கள் யாரும் வாழ்ந்ததாக, உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. 
 

இது தொண்டர்கள் இயக்கம். தி.மு.க.வில் ஒரு தொண்டன் முதல்-அமைச்சராக வர முடியுமா? முடியாது. அ.தி.மு.க. வில்தான் ஒரு தொண்டன் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக வர முடியும். ஒரு தொண்டர் பழனிசாமி முதல்-அமைச்சராக உள்ளார். தி.மு.க.வை எதிர்த்துதான் அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. நமக்கு ஒரே எதிரி தி.மு.க.தான். ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற வரலாற்றை உருவாக்கி தாருங்கள். இவ்வாறு கூறினார்.
 

சார்ந்த செய்திகள்