Skip to main content

நம்பிக்கை இல்லா தீர்மானம்; திமுக உறுப்பினர்கள் மனு 

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

no confidence motion in karur union president posting

 

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஒன்றியத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக  உள்ளாட்சித் தேர்தலில் 15 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைச் சேர்ந்த 11 பேரும்,  திமுக சார்பில் 4  பேரும்  வெற்றி பெற்றனர். இதில் தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த லதா ரங்கசாமி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு துணைத் தலைவர் மற்றும்  ஒன்றியக் குழு உறுப்பினர்கள் 8 பேர் திமுகவில் இணைந்தனர். இதனால் தோகைமலை ஒன்றியத்தில் திமுகவின் பலம் 12 ஆக உயர்ந்தது. அதன்பிறகு திமுக ஒன்றியக் குழு உறுப்பினர் ஒருவர் மீண்டும் அதிமுகவிற்கு அணி மாறியதால் தற்போது திமுகவின் பலம் 11 ஆகவும்  அதிமுக கூட்டணி பலம் 4 ஆகவும்  உள்ளது.

 

இந்நிலையில், தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவர் லதாவின் கணவரும், தோகைமலை மேற்கு ஒன்றிய அதிமுக  செயலாளருமான ரங்கசாமி தனது மனைவியின் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஒன்றிய நிர்வாகத்தில் அதிக அளவில் தலையிட்டு வருவதாகவும், ஒப்பந்தப் பணிகள் மற்றும் அரசு வாகனங்களுக்குத் தனது பங்கில் எரிபொருள் நிரப்பிக் கொண்டும், அதற்கான ரசீதை முன்கூட்டியே எடுத்து விடுவதாகவும் பல்வேறு  ஒப்பந்தங்களில் முறைகேடு செய்துள்ளதாகவும் அரசு அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும் அதனைக் கேட்கும் ஒன்றிய கவுன்சிலர்களை ஆட்களை வைத்து மிரட்டி வருவதாகவும் அதற்கு ஒன்றியக் குழுத் தலைவர் துணை போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

மேலும்  அதிகார துஷ்பிரயோகம் செய்யும் தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவர் லதா ரங்கசாமியை பதவியிலிருந்து நீக்க, வரும் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவியிடம் 11 திமுக குழு உறுப்பினர்கள் கடிதம் அளித்தனர். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவி,  உரிய விசாரணை செய்து பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.