Skip to main content

சிறையில் இருந்து நெல்லை கண்ணனை ரகசிய வழியில் வெளியேற்றிய போலீஸ்! ''பாவம் அவர்களை மன்னித்து விடுங்கள்!"

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

 

நரேந்திரமோடி, அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு ஜாமின் கிடைத்ததை அடுத்து, சிறையின் பின்பக்க வாயில் வழியாக ரகசியமாக இன்று (ஜன. 11) காலை வெளியே அனுப்பி வைக்கப்பட்டார். 

 

nellai kannan




குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டனக் கூட்டம் ஒன்றை எஸ்டிபிஐ கட்சியினர் கடந்த 29.1.2019ம் தேதி நெல்லையில் ஏற்பாடு செய்திருந்தனர். காங்கிரஸ் கட்சி பேச்சாளரும், தமிழறிஞருமான நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அந்தக் கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை அவதூறாக பேசியதாக பாஜகவினர் புகார் அளிக்க, அவரை ஜன. 1ம் தேதி இரவு கைது செய்தது காவல்துறை. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, ஜன. 3ம் தேதியன்று சேலம் மத்திய சிறைக்குக் கொண்டு வந்து அடைத்தனர்.  


இந்நிலையில், நெல்லை மேலப்பாளையம் காவல்நிலையத்தில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கி நெல்லை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) உத்தரவிட்டது. ஜாமின் உத்தரவு கடிதத்தை, நெல்லை கண்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சேலம் மத்திய சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.


 


அதையடுத்து, காலை 7.05 மணிக்கு நெல்லை கண்ணனை, சேலம் மத்திய சிறையின் பின்பக்க வாயில் வழியாக ரகசியமாக சிறை நிர்வாகம் அனுப்பி வைத்தது. அவருடைய மகன் சுகா, உதவியாளர் பாஸ்கரன் ஆகியோர் அவரை ஒரு காரில் அழைத்துச் சென்றனர். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி, நெற்றியில் திருநீறு என வழக்கமாக அவர் அணியும் உடைகள், ஒப்பனையுடனே சிறையில் இருந்து வெளியேறினார்.

 

ஜாமினில் விடுதலை செய்யப்படும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட அனைத்து கைதிகளும் வழக்கமாக சிறையின் முகப்பு வாயில் வழியாகவே அனுப்பி வைக்கப்படுவர். ஆனால், புதிய நடைமுறையாக யாருமே பயன்படுத்தப்படாத பின்பக்க வாயில் வழியாக ரகசியமாக நெல்லை கண்ணனை அனுப்பி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியினர், சேலத்தைச் சேர்ந்த அவருடைய வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரும் சிறை முன்பு கூடியிருந்தனர். ஆனால், நெல்லை கண்ணன் சிறையில் இருந்து கிளம்பிச் சென்ற தகவல் அவர்களுக்கும் தெரியப்படுத்தவில்லை.


நெல்லை கண்ணன் ஜாமினில் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து சிறை முன்பாக பாஜகவினர் கூடுவதாக கிடைத்த தகவலின்பேரில், இப்படியொரு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், பாஜக தரப்பில் ஒருவர் கூட சேலம் சிறை முன்பு வரவில்லை. எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மட்டுமே அவரை வரவேற்பதாக சேலம் சிறை முன்பாக கூடியிருந்தனர். ஆனால் அவர்களை சந்திக்க விடக்கூடாது என்பதற்காகவே சிறைத்துறை நிர்வாகம் திட்டமிட்டு, நெல்லை கண்ணனை ரகசிய வாயில் வழியாக அனுப்பி வைத்துள்ளதாக சொல்கின்றனர்.


சேலம் மாவட்ட பாஜக தலைவர் கோபிநாத்திடம் கேட்டபோது, ''நெல்லை கண்ணனுக்கு ஏற்கனவே எங்கள் தரப்பு எதிர்ப்பை பதிவ செய்துவிட்டோம். அதனால் அவர் ஜாமினில் விடுதலை ஆகும்போது கண்டனம் தெரிவிக்கும் எந்தவித திட்டமும் எங்களிடம் இல்லை. நானும் தற்போது கோனார்க்கில் இருக்கிறேன்,'' என்றார். ஆனால் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகச் சொல்லியே, நெல்லை கண்ணனை ஊடகத்தினர், ஆதரவாளர்களை சந்திக்க விடாமல் காவல்துறையும், சிறைத்துறையும் திட்டமிட்டு இவ்வாறு ஒரு வதந்தியை பரவ விட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 


 


இதற்கிடையே, சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையான நெல்லை கண்ணன் ஏவிஆர் ரவுண்டானா அருகில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிடச் செல்வதாக தகவல் கிடைத்து, பத்திரிகையாளர்கள், காட்சி ஊடகத்தினர் அங்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஐஸ்வர்யம் மருத்துவமனை அருகே சென்றுவிட்டதாக தகவல் கிடைத்து அங்கே சென்றனர். காருக்குள் இருந்து நெல்லை கண்ணன் இறங்காமலேயே, 'போதும் விட்டுடுங்கய்யா...' என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டு கிளம்பி ச்சென்று விட்டார்.

 


இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த நெல்லை கண்ணன் தரப்பு வழக்கறிஞர் ஜாகீர் அஹமது கூறுகையில், ''குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த கூட்டத்தில் பேசிய ஒரே காரணத்திற்காக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று அவருக்கு, ஒரு வார காலத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. நீதிமன்றம் வழங்கிய ஜாமின் கடிதம், சேலம் சிறை நிர்வாகத்திடம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கைதிகள் சிறையின் முன்பக்க வாயில் வழியாகத்தான் அனுப்பி வைக்கப்படுவர். 

 

lawyer zakeer ahmed



ஆனால், சிறைத்துறை நிர்வாகம், பாஜகவினர் அவருக்கு எதிராக கூட்டம் போட்டு கோஷம் போடுவார்கள என்று திசை திருப்பி, திருட்டுத்தனமாக பின்பக்க வாயில் வழியாக அனுப்பி வைத்திருக்கிறது. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் நேரில் சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அவருடைய வயோதிகம் காரணமாக, சிறையில் தரையில் படுத்து இருந்ததால் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு போதிய வசதிகள் சேலம் சிறையில் இல்லை,'' என்றார்.

 

nellai kannan


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராமசுகந்தன், ''நெல்லை கண்ணனை கைது செய்து நெல்லை, சேலம் சிறை என வயதானவரை அலைக்கழித்திருப்பது கண்டிக்கத்தக்கது. பேச்சுரிமை என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் தரக்குறைவாக பேசி வரும் பாஜகவினர் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. உயர்நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய ஹெச்.ராஜா, பெண் பத்திரிகையாளர்களை மரியாதைக்குறைவாக பேசிய எஸ்வி சேகர் ஆகியோர் மீது இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கடும் கண்டனத்திற்குரியது,'' என்றார்.


இதையடுத்து நாம் நெல்லை கண்ணனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். வழக்கமான உற்சாகத்துடன் பேசினார். அவரிடம் நாம், 'சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்' என திருக்குறளை சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே அவர், 'அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது' என்று சற்றும் உற்சாகம் குறைவின்றி அந்தக் குறளின் எஞ்சிய பகுதியை சொல்லி முடித்தார்.


மேலும் அவர், ''நெல்லையில் பேசும் தமிழ், இங்குள்ளவர்களுக்கே தெரிய மாட்டேங்குது. அப்புறம் எப்படி மஹாராஷ்டிராவில் இருந்து வந்திருக்கும் ராஜாவுக்கு தெரியும்? நாமெல்லாம் திருக்குறள் படித்துவிட்டு பேசுகிறோம். இந்த நேரத்தில் பாஜகவினருக்கு விவிலியம் கருத்துதான் பொருந்தும் என நினைக்கிறேன்... 'பாவம் அவர்கள். தான் இன்ன தவறு செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார்கள். அவர்களை மன்னித்து விடலாம்,'' என்று நா நயத்துடன் சொல்லிச் சிரித்தார்.


அவர்தான் நெல்லை கண்ணன்.

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.