Skip to main content

கண்டன ஆர்ப்பாட்டம்: ஓ.பி.எஸ்.சை ஓவர்டேக் செய்த அண்ணாமலை! 

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

Mullai Periyaru Dam; Annamalai overtakes OPS!

 

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரள அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகிவருகிறது. இதனைக் கண்டித்து தமிழ்நாட்டில், எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜக சார்பில் தனித்தனியே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.  

 

Mullai Periyaru Dam; Annamalai overtakes OPS!

 

 

தேனி மாவட்டத்தின் தலைநகரான தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே கடந்த 8ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்திலிருந்து கட்சிகளுடன் விவசாயிகளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆளுங்கட்சியான திமுகவையும், கேரள அரசையும் கண்டித்துப் பேசினார். உளவுத்துறை மூலம் பாஜக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டனர் என்ற ரிப்போர்ட்டும் அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அதிகளவிளான மக்கள் கலந்துகொண்டது தேனி மாவட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

 

அதேபோல் மறுநாள் 9ஆம் தேதி அதிமுக சார்பில் கம்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். முன்னிலைப்படுத்தி நடத்துகிறார் என்பதால் அதிக அளவில் கட்சிக்காரர்களையும், பொதுமக்களையும் திரட்ட வேண்டும் என்று அதிமுக முடிவு செய்து, தலைக்கு இருநூறு ரூபாயும், பிரியாணியும் கொடுத்து கூட்டத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், மாவட்டத்திலுள்ள நகரம், ஒன்றியம், கிளை பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட வண்டி வாகனங்களில் அதிகளவு மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை. இதனால், கம்பத்தில் ஓ.பி.எஸ். நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாமல் போனது.

 

Mullai Periyaru Dam; Annamalai overtakes OPS!

 

பாஜகவின் கூட்டத்தைவிட, ஓ.பி.எஸ். நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதுபோல் ஓ.பி.எஸ்.-ம் கூட அண்ணாமலை போல் காரசாரமாக பேசாமல், முல்லைப் பெரியாறு உருவாகிய வரலாறு பற்றி பேசிவிட்டு, 15 வருடம் போராடி 142 அடி தண்ணீரை தேக்கி வைத்தோம். அந்த உரிமையை திமுக அரசு விட்டுக்கொடுத்துவிட்டது என ஒருசில விஷயங்களை மட்டும் பேசிவிட்டு லோயர் கேம்ப் சென்று, அங்கு உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தில் இருக்கும் பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்தார். 

 

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “இதுவரை ஓ.பி.எஸ். பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்ததில்லை. சிலைக்கு முன்பாக அவர் படத்தை வைத்து அதில்தான் மாலை அணிவித்திருக்கிறார். அப்படியிருக்கும்போது தற்போது அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்திருக்கிறார். அதேபோல் முல்லை பெரியாறு அணைக்கு ஆய்வுக்கு வந்திருந்த அமைச்சர் துரைமுருகனின் கேள்விக்கு, ‘நான் 14 முறை முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று 5 மாவட்ட விவசாயிகளுக்காக தண்ணீரை திறந்துவிட்டேன்’ என்றார். அதற்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வருவதைக் கண்ட ஓ.பி.எஸ்., பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும்போது பெரியாறு அணைக்குச் சென்றுவந்த புகைப்படத்தை வெளியிட்டு பெரியாறு அணைக்கு போய் வந்தேன் என்றிருக்கிறாரே தவிர, முல்லைப் பெரியாறு விஷயத்தை ஓ.பி.எஸ். சரிவர கையாளவில்லை’ என்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.