Skip to main content

புதிய நாடாளுமன்றத்திற்குச் சென்ற சு.வெங்கடேசன் எம்.பி; அதிர்ச்சி பேட்டி!

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

MP Su Venkatesan who went to the new Parliament; Shock interview

 

மதுரை எம்.பி. சு எங்கடேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று நாடாளுமன்றத்தின் ரயில்வே துறையின் ஆலோசனைக்கூட்டமும், கல்வித்துறையின் நிலைக்குழு கூட்டமும் நடைபெற்றது. அதில் பங்கேற்க நான் வந்திருந்தேன். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை பார்வையிட்டேன். அது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. குறிப்பாக புதிய கட்டடத்தின் காட்சிகள் முழுக்க சனாதானத்தை விளக்கும் காட்சியாகவும் சமஸ்கிருதத்தை போற்றும் காட்சியாகவும் தான் இருக்கிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, தேச விடுதலை போராட்டம் போன்றவற்றின் எந்த அடையாளமும் அதில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பாஜகவின் அலுவலகத்தை போல நாடாளுமன்ற கட்டடத்தை வடிவமைத்துள்ளார்கள்.

 

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சாணக்கியரின் உருவத்தை பொறித்துள்ளார்கள். கையில் தண்டம் ஏந்தி இன்னொரு விரலை ஆவேசத்தோடு நீட்டி இருக்கும் சாணக்கியன் ஏறக்குறைய 30 அடி உயரத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளார். சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது. அரசியல் சாசன சட்டம் போற்றப்பட வேண்டிய இடத்தில் அர்த்த சாஸ்திரத்தை நினைவு படுத்த வேண்டிய தேவை என்ன என்பது முக்கிய கேள்வி. 

 

அதைக்கடந்து உள்ளே போனால் மைய வளாகத்தில் சுமார் 250 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமாக விஷ்னு புராணத்தில் வரும் பாற்கடலை கடையும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேரு மலையை மத்தாக ஆதிசேசனை கயிறாக கொண்டு தேவர்கள் ஒருபுறமும் அசுரர்கள் ஒருபுறமும் பாற்கடலை கடைகிற இந்த காட்சிக்கும் நாடாளுமன்றத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அப்படிப்பட்ட மையமான இடத்தில் பிரிட்டிஷ்க்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை காட்சிப்படுத்த வேண்டும். அப்படி காட்சிப்படுத்தினால் தங்களது துரோக வரலாறு நினைவு படுத்தப்படும் என்ற அச்சத்தில் புராணங்களை காட்சிப் படுத்தியுள்ளனர். 

 

இதையெல்லாம் அடுத்து உள்ளே போனால் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அரசியல் சாசனத்தின் நூல் வைக்கப்பட்டு அதை காட்சிப்படுத்தும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன புத்தகத்தின் கோட்டோவியத்தை நந்தலால் போஷ் வரைந்துள்ளார். அதில் 22 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அந்த 22 ஓவியங்களும் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகால இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை நினைவு படுத்தவும், இந்தியாவின் பன்மைத்துவத்தை நினைவு படுத்தவும் வரையப்பட்ட ஓவியங்கள். அதில் 16 ஓவியங்களை நாங்கள் காட்சிப்படுத்த மெருகூட்டியுள்ளோம் என சொல்லி 16 காட்சிகளை உருவாக்கியுள்ளார்கள். நந்தலால் போஷின் முதல் படம் சிந்துவெளி நாகரீகம் என்று சொல்லக்கூடிய எருதில் இருந்து துவங்கும். ஆனால் இவர்கள் வரைந்துள்ள முதல் படம் தவமிருக்கும் முனிவரில் இருந்து துவங்குகிறது. வேதகாலத்தில் இருந்து இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டு, ராமாயண ஓவியங்கள் நந்தலால் போஷின் ஓவியங்களில் இருந்தாலும் அது காவிய காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் இவர்கள் வரலாறு என கட்டமைத்துள்ளார்கள்.

 

சிந்து வெளி நாகரீகம், புத்தர்கள் காலம், மௌரியர்கள் காலம், முகலாயர்கள் காலம் என அனைத்திலும் இருந்து இந்திய ஜனநாயகம் எப்படி வளர்ந்தது என்று நந்தலால் போஷ் காட்சிப்படுத்தியிருப்பார். அவை அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டது. ஒற்றைத் தத்துவமாக ஒற்றைக்கோட்பாடாக இந்துத்துவா கோட்பாடு மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் காட்சியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வேதனை என்னவென்றால் சவார்க்கரின் பிறந்த நாளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் முழங்க மன்னராட்சியின் அடையாளமான செங்கோல் ஏந்தி நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது என்று தான் நாம் நினைத்திருந்தோம். திறக்கப்பட்டது மட்டுமல்ல இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் இந்த கட்டடத்தை அவர்கள் வடிவமைத்துள்ளார்கள்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.