Skip to main content

நாகையில் ஏரியாவிற்கு தகுந்தாற்போல் பேசி மக்களை கவர்ந்து வாக்குகளை கேட்கும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

கஜா புயல் நிவாரணம் மக்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன், துறைமுகத்தை சீர்செய்வேன் என  இடத்திற்கு தகுந்தாற்போல், வாக்குறுதிகளை கொடுத்து வாக்கு சேகரித்துவருகிறார் நாகை நாடாளுமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் குருவையா.

 

mnm candidate election campaign

 

இம்மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வாக்கு வேட்டையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நாகையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடும் ஓய்வுபெற்ற நீதிபதியான குருவைய்யா. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் ஏரியாவிற்கு தகுந்தாற்போல் வாக்குறுதிகளை கொடுத்துவருகிறார். இந்நிலையில் நாகூரில் பேசும்போது “காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால். நாகை மாவட்டத்தை சேர்ந்த நாகூர் திட்டச்சேரி திருமருகல் உள்ளிட்ட பல கிராமங்களின் சுற்றுசூழல் பாதிப்பால் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றன. அவர்கள் சளி, ஆஸ்துமா, புற்றுநோய், என பல தொல்லைகளால் அவதிப்படுகின்றனர். இதை மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.
 

 
அதேபோல் நாகப்பட்டினத்தில் பேசும்போது, “பழமை வாய்ந்த நாகை துறைமுகம் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் கிடக்கிறது. இதனை நவீனப்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவந்து அதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்’’ என்றார்.

 
செருதூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தவர், “மற்ற தொகுதிகளைக் காட்டிலும் நாகப்பட்டினம் தொகுதி கல்வியில் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது. அதனை போக்க சர்வதேச அளவிலான கல்வி கிடைக்க வழிவகை செய்வேன். புயலால் பாதிக்கப்பட்ட வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பகுதிகளில், புயல் நிவாரணம் என்பது முழுமையாக இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக கிராமத்தில் உள்ள ஏழ்மையான மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆளுங்கட்சி பிரமுகர்கள் மட்டுமே அந்த நிவாரணத்தை எடுத்துச் சென்றிருக்கின்றனர் .அந்த நிவாரணம் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்” என்றார்.



சுகாதாரமில்லாமல் இருக்கும் பகுதிகளில் ஒன்றான தலைஞாயிறு பகுதியில் பேசியவர், “உலக தரத்தில் மருத்துவ சிகிச்சை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இலங்கை உடனான தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு என அனைத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பேன். இதற்கு முன்பு மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் சரியாகவும் செய்யாத காரணத்தினால்தான் தொகுதியில் உள்ள குறைகள் இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றால் வித்தியாசமான முறையில் மக்களுடன் கலந்து பேசி அவர்களுக்கான குறைகளை தீர்ப்போம் நிதி ஒதுக்கீட்டில் எந்த ஒளிவுமறைவும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் தொகுதிக்காக செலவு செய்யப்படும். கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் பார்த்திராத ஒரு மக்களவை உறுப்பினர்போல் நான் செயல்படுவேன்’’ என்றார். “நீதிபதியாச்சே அவருக்கு எங்க என்ன பேசணும்னு தெரியாமலா போகும்’’ என்கிறார்கள் மற்ற கட்சிக்காரர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

அறிவாலயம் வந்த கமல்ஹாசன்; உறுதியான திமுக-மநீம கூட்டணி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kamal Haasan who went dmk head office; A solid DMK-MNM alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமை அலுவலமான அண்ணா அறிவாலயம் சென்றுள்ளார். அவரை அமைச்சர் உதயநிதி வரவேற்றார். நேற்று மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டிற்கான கையொப்பம் கையெழுத்தானது.

இன்று மாலை காங்கிரஸ் திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி மறைமுகமாக திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் அண்ணா அறிவாலயம் வந்துள்ளார். இதனால் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், 'இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. இது பதவிக்கான தேர்தல் கிடையாது. நாங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். இது பதவிக்கான விஷயம் அல்ல; நாட்டுக்கான விஷயம். நான் எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்திருக்கிறேன். மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் (ராஜ்ய சபா) ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.

இதுவரை திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட்- 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் -2 தொகுதி, ஐ.யூ.எம்.எல்- 1 தொகுதி, கொ.ம.தே.க-1 தொகுதி, மதிமுக-1 தொகுதி, விசிக-2 தொகுதி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி  என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. காங்கிரஸ்-திமுக இடையே தற்போது வரை இறுதி பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.