
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக முறைகேடு புகார்களை முன்வைத்து வருகிறார். மின்சாரத்துறையின் ரூ.4,442 கோடி ரூபாய் ஒப்பந்தம் விதிமுறைகளை மீறி பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் ஊழியர் போல் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இதனை நிரூபிக்க வேண்டும், இல்லை என்றால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கெடுவிதித்து எச்சரிக்கைவிடுத்தார்.
இந்தக் கெடுவுக்கு பதிலளித்த அண்ணாமலை, எனக்கு கெடுவிதிக்க அவர் என்ன பிரம்மாவா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், பிஜிஆர் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், செந்தில் பாலாஜி என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தாலும், காவல்துறையை வைத்து கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் சந்திக்க தயார் என்று தெரிவித்தார்.
மேலும் சமீபத்தில் மகளிர் தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அண்ணாமலை, “நான் 20,000 புத்தகங்கள் படித்துள்ளேன்” என்று பேசியிருந்தார். இது சமூகவலைதளத்தில் பெரும் கிண்டலுக்குள்ளானது.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பி.ஜி.ஆர். நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019. டெண்டர் கொடுத்த ஆட்சி அதிமுக. வாழ்ந்த 13700+ சொச்ச நாட்களில் 20,000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக்கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்து கொள்ள பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.