இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக அமெரிக்காவிலிருந்து தனி விமானத்தில் இந்தியா வந்த ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை அகமதாபாத்தில் பிரதமர் மோடி வரவேற்றார். பாரம்பரிய கலைஞர்கள் சார்பில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சபர்மதி ஆசிரமம் சென்று ட்ரம்ப் மற்றும் மெலனியா பார்வையிட்டனர். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்' உள்ளிட்ட பல நிகழ்சிகளில் பங்கேற்றனர். 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய போது பொதுமக்களை நோக்கி ட்ரம்ப் கையசைத்தார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.
![minister rajendara balaji about Trump India Visit](http://image.nakkheeran.in/cdn/farfuture/wl3rlKI_FrdpgiakJ4OcD9heQ7OpH5mflnWRg0f-MHQ/1582627571/sites/default/files/inline-images/11111_111.jpg)
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாம்சாபுரம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, " இந்தியாவிற்கு வந்துள்ள ட்ரம்ப் இரட்டை இலையைக் குறிக்கும் வண்ணம் இரண்டு விரலையும் தூக்கி காட்டியுள்ளார். மோடி அமெரிக்கா சென்றாலும் இரண்டு விரலைத்தான் தூக்கி காட்டுக்கிறார். இப்படி உலகமே காட்டக்கூடிய, வெற்றியின் சின்னத்தை அதிமுக கட்சியின் சின்னமாக கொண்டு வந்தவர் எம்ஜிஆர்" என்ற தெரிவித்தார். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்ததை, 'இந்தியாவிற்கு ட்ரம்ப் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கத்தான் வந்துள்ளார்' என சமூக வலைதளத்தில் பதிவிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.