![The matter of the Deputy Leader of the Opposition; Edappadi Palaniswami approached the court](http://image.nakkheeran.in/cdn/farfuture/4k-C2Zuzv46PzUMa3oKCn3CMUBVaeNsKUL9I1zd1zVY/1698399818/sites/default/files/inline-images/ops-eps_43.jpg)
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக தானும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இதனையடுத்து 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர் செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். எனவே எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமித்து சபாநாயருக்கு கடிதம் அனுப்பியும், இது குறித்து ஐந்து முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகரிடம் பலமுறை முறையிட்டும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தங்களது கோரிக்கைகளை அங்கீகரிக்கும்படி, சபாநாயகருக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் உத்தரவிட வேண்டும், எதிர்க்கட்சி துணை தலைவருக்கான இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.