Skip to main content

"நான்கு மாதம் கழித்து அண்ணாமலை திருவாய் மலர்ந்திருக்கிறார்" - கே.எஸ்.அழகிரி பேட்டி

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

KS Azhagiri interview

 

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் வருகையின் போது பிரதமருக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதற்கு டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு தமிழக அரசு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். பொதுவாகவே அவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அடிக்கடி சொல்வார்கள். பிரதமர் வந்து சென்ற நான்கு மாதம் ஆகிறது. நான்கு மாதம் கழித்து தான் அண்ணாமலை திருவாய் மலர்ந்திருக்கிறார், பாதுகாப்பு இல்லை என்று. ஆனால், தமிழக காவல்துறையின் தலைவர் சொல்லியிருக்கிறார் எந்த விதமான குறைபாடும் இல்லை. முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறார்.

 

இவர்கள் யோசித்து யோசித்து குற்றம் சொல்கிறார்கள். குற்றம் சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்கிறார்கள். ஒரு தவறான விளம்பரத்திற்காக இவர்கள் செயல்படுகிறார்களே தவிர இவர்களுக்கு ஆக்கபூர்வமான கொள்கைகள் எதுவும் கிடையாது. தமிழகத்தோடு பிற மாநிலங்களுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்களில் பணிகள் முடிந்து பிரதமர் திறந்து வைத்து விட்டார். ஆனால், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காம்பவுண்ட் சுவரைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

 

தமிழ்நாட்டில் இருக்கிற பாரத ஜனதா கட்சி டெல்லி சென்று அங்கு செயல்பட வேண்டும். ஏன் எங்கள் மாநிலத்தைப் புறக்கணித்துள்ளீர்கள்? மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிட்டது. எங்கள் மாநிலத்தில் ஏன் எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை? வெளியில் எப்படி தலை காட்டுவது என்ற கேள்வியை அவர்கள் கேட்க வேண்டும் அல்லவா. அப்படி செய்தால் தான் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்று பெயர்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.