Skip to main content

"இதில் கருத்து சொல்ல வேண்டிய அம்சம் இல்லை..” - மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கே.எஸ். அழகிரி

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

K S Azhagiri addressed press.. spoke about central cabinet


கடலூர் மாவட்டத்தில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி ஏராளமானோர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் காமராஜர் சிலை அருகில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, "இலங்கை ராணுவம் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க மத்திய மோடி அரசு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவெடுக்க வேண்டும்.

 

மேகதாது பிரச்சனையில் கர்நாடக அரசு அணை கட்டித் தண்ணீரைத் தடுப்பது என்பது கண்டனத்திற்குரியது. இது சம்பந்தமாக டெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். இது சம்பந்தமாக அவர்களும் உறுதிமொழி தந்துள்ளனர். இது காப்பாற்றப்படும் என்று நினைக்கிறோம். இல்லையென்றால் தமிழக காங்கிரஸ் வன்மையான கண்டனத்தையும் நடவடிக்கையும் எடுக்க நேரிடும்.

 

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக இருந்தபோது 70 ரூபாய்க்குப் பெட்ரோல் விற்பனை செய்தது. இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 டாலராக இருக்கும் நிலையில், 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது தவறு. பொருளாதாரம் தெரியாத காரணத்தினால் ஏராளமான கலால் வரியை பெட்ரோல் டீசல் மீது இவர்கள் விதிக்கின்றனர். நாடு வளமாக இருப்பதற்கு வரி விதிப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வரியை வைத்துக்கொண்டு மட்டுமே ஒரு நாட்டை வளமாக வைத்திருக்க முடியாது. எனவே இவர்கள் வரி விகிதாச்சார முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவிக்கிறது. நாங்களாக இருந்தால் பெட்ரோல் டீசல் விலையை ரூ. 70க்கு விற்க முடியும். அதற்கான பொருளாதார திட்டம் எங்களிடம் உள்ளது" என்றார். 

 

அவரிடம் மத்திய அமைச்சரவை புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பது பற்றி கேட்டதற்கு, "அது இயல்பான ஒரு செயல். இது தேர்தலுக்காக அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கருத்து சொல்ல வேண்டிய அம்சம் இல்லை" என்று அழகிரி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெளியான லிஸ்ட்; மறுக்கும் காங்கிரஸ்

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
Released List; Congress refuses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் குழுவுடன் இன்று (28.01.2024) மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடந்தது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது . திமுக குழுவினருடன் காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றனர். இதன் மூலம் திமுக தனது கூட்டணிக் கட்சிகளில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் சென்னை காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் 21 மக்களவை தொகுதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

கடந்த முறை போட்டியிட்ட திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளுடன் புதியதாக திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென்சென்னை, அரக்கோணம் ஆகிய 21  தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக பட்டியல் ஒன்று வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் ஊடகப்பிரிவுத் தலைவர் போபண்ணா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தொகுதிப் பங்கீடு தொடர்பான திமுக உடனான காங்கிரஸ் மேல்நிலை குழு பேச்சுவார்த்தை நடத்தியது திருப்திகரமாக இருந்ததாக கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளதோடு, திமுகவிடம் தொகுதி பட்டியல் எதையும் வழங்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

Next Story

“ஆளுநர் ஆர்.என். ரவி பா.ஜ.க. தலைவராகவே மாறி உளறியிருக்கிறார்” - கே.எஸ். அழகிரி

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

“Governor R.N. Ravi He has become a BJP  leader himself" - K.S. Alagiri

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தனியார் ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் அவர் திமுக அரசு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, “ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிராக இந்த திராவிட மாடல் கொள்கை இருக்கிறது. திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. அதனை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். இதற்கும் அவர் தெரிவித்திருந்த மற்ற கருத்துக்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்தனர். 

 

அந்தவகையில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர் கூறியிருப்பதாவது; “தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனத்தை மீறி சர்ச்சை கருத்துகளை சொல்வதை தொழிலாகவே கொண்டு உள்ளார். சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மீண்டும் விஷத்தை கக்கியுள்ளார். திராவிட மாடல் என்பது செத்துப்போன வெற்றுக் கோஷம் என்றும் ஒரே பாரதம் கொள்கையை போன்றது அல்ல என்றும் பா.ஜ.க. தலைவராகவே மாறி உளறியிருக்கிறார். 

 

ஒரு அரசியல் கட்சியின் கொள்கையை பற்றி பேச இவர் என்ன அரசியல் தலைவரா? இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழகத்தின் அரசியல் பாரம்பரியத்தைப் பற்றி சிறிதும் அறியாத கவர்னர் ரவிக்கு, அது குறித்து பேச என்ன யோக்கியதை இருக்கிறது? சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட இருந்தோம். அவர் உடனே ஒப்புதல் அளித்ததால் கண்டனப் போராட்டமாக நடத்தினோம். தி.மு.க.வின் கொள்கை என்பது மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. மாநில நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கிற இயக்கம். ஆனால், கவர்னர் கூறுகிற ஒன்றே பாரதம், ஒரே நாடு என்பது பா.ஜ.க.வின் கொள்கை. 

 

இந்தியாவில் அனைத்திலும் ஒற்றைத் தன்மையையும், ஒற்றை ஆட்சியையும் நோக்கமாகக் கொண்டது. மத்தியில் அதிகாரக் குவியலை வளர்க்கிற இயக்கம் பா.ஜ.க. இந்த இரண்டிற்கும் இருக்கிற வித்தியாசத்தை புரிந்து கொள்ளாமல் கவர்னர் விதண்டாவாதம் பேசியிருக்கிறார். அரசியல் சாசன பதவியில் இருக்கும் கவர்னர் தொடர்ந்து வரம்பு மீறிக்கொண்டிருக்கிறார். அனைவரும் ஓரணியில் திரண்டு கவர்னரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கிவிட்டது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.