Skip to main content

“சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையால்தான் ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்தது..” - சி.வி.சண்முகம்

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

"Jayalalithaa had to go to jail due to the robbery committed by Sasikala's family." - CV Shanmugam

 

சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா, சமீப நாட்களாக தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவினருடன் ஆங்காங்கே செல்போன் மூலம் பேசி நலம் விசாரிப்பதும், கட்சி வீணாவதை இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கட்சியை காப்பாற்ற நான் வருவேன். கரோனா நோய் பரவல் குறைந்த பிறகு உங்களை சந்திப்பேன் என கட்சித் தொண்டர்களிடம் பேசி வருகிறார். அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சுமார் 15 கட்சி நிர்வாகிகளை கட்சியிலிருந்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் நீக்கியுள்ளனர். 


இதையடுத்து மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகளை அழைத்து தீர்மானம் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு அனுப்பி வருகிறார்கள். அந்த அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் வானூர் சக்கரபாணி, திண்டிவனம் அர்ச்சுனன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் வேட்டை முருகன், சுரேஷ்பாபு, ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


அந்தக் கூட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், “சசிகலா குடும்பத்திற்கும் இந்த இயக்கத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக அவர் ஒரு நாடகத்தை தினந்தோறும் தொலைபேசி மூலமாக நடத்திக் கொண்டு வருகிறார். ‘நான் வருகிறேன், இதோ வருகிறேன்; அதோ வருகிறேன்’ என்று வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கிறார். தொண்டர்களையும் அதிமுகவையும் ஏமாற்றி விடலாம், அதன் மூலம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி கொள்ளையடிக்கலாம் என்று சசிகலா கனவு காண்கிறார். 

 

ஒன்றரை கோடி தொண்டர்கள் இந்த இயக்கத்தில் இருக்கும் வரை எந்த காலத்திலும் அவரது கனவு நிறைவேறாது. ஜெயலலிதா சிறைக்கு செல்ல காரணமே இந்த குடும்பம் அடித்த கொள்ளையால் தான். இவர்கள் அடித்த கொள்ளை அத்தனை பழிகளையும் ஜெயலலிதா ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. அவர் கூடவே இருந்து இந்த இயக்கத்தின் மூலம்  வளர்ந்தவர்கள் தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் அப்படிப்பட்ட துரோகிகளை நினைவு வைத்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பலை எந்த நிலையிலும் கட்சிக்குள் நெருங்க விடக்கூடாது. சென்னையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.  தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி உங்கள் ஆதரவோடு விழுப்புரம் மாவட்ட அதிமுக அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறது” என்று அறிவித்தார். 

 

அதை அங்கிருந்த நிர்வாகிகள் அனைவரும் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டனர். இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கட்சிக்குள் நுழைய விட கூடாது. மீண்டும் அவர்கள் கட்சிக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்துவார்கள். அவர்கள் ஆட்டத்தை தாங்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் கட்சித் தொண்டர்களிடம் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே, அது போன்ற நிலை அதிமுகவிற்கு இனிமேல் ஒருபோதும் வரக்கக்கூடாது என்பதில் மற்ற நிர்வாகிகளை விட ஓ.பி.எஸ். சி.வி. சண்முகம் போன்றவர்கள் உறுதியாக உள்ளனர் என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். சசிகலா அதிமுகவிற்குள் ஊடுருவுவாரா? அதை கட்சித் தொண்டர்கள் விரும்புவார்களா? வெறுப்பார்களா? என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

பா.ஜ.க.வை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
the former minister CV shanmugam who slammed the BJP

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் ஆட்சி செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார். 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்குக் கிட்டத்தட்ட ஆயிரம் எஞ்ஜினியர்கள் வேலைக்கு எடுத்தனர். இவர்களில் ஒரு தமிழருக்கு கூட இல்லை. அத்தனை பேரும் வட இந்தியர்கள். ஜிப்மர் மருத்துவமனையில் வேலை கொடுங்கள், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை கொடுங்கள். அரசு நிறுவனங்கள் எல்லாம் விற்று விட்டனர். இந்தியாவில் இரண்டு பேர் மட்டுமே வளர்ந்துள்ளனர். ஒருவர் அம்பானி மற்றொருவர் அதானி. பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் திருவள்ளுவர், தமிழ் என்று பேசுவார். ஆனால் மறுபுறம் இந்தி திணிப்பு.

மத்திய பா.ஜ.க. அரசு மதத்தின் பெயரால் நாட்டை துண்டாடப் பார்க்கிறது. அமைதியாக உள்ள தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரும் சமம். வழிபாட்டு உரிமை என்பது என்னுடைய உரிமை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூற பா.ஜ.க.வுக்கு உரிமை இல்லை” என்று ஆவேசமாக பேசினார்.