Skip to main content

“அவருடைய பதவிக்கு அது அழகல்ல...” - டி.டி.வி. தினகரன் பேட்டி

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

'It is not attractive for his position...'-TTV Dinakaran interview

 

ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாவிற்கு விளக்கம் கேட்டு சில தினங்களுக்கு முன் தமிழக ஆளுநர் தமிழக அரசுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதற்குத் தமிழக அரசு சார்பிலும் பதில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி நேற்றுடன் காலாவதியானது.

 

இதுகுறித்து பல்வேறு கட்சியினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த டி.டி.வி.தினகரன்,

 

''இது ரொம்ப துரதிருஷ்டவசமானது. ஆளுநர் தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதிக் கையெழுத்திடாமல், அரசு கொண்டு வருகின்ற சட்டங்களைக் காலம் தாழ்த்தி காலாவதியாகும் அளவுக்குக் கொண்டு செல்வது அவருடைய பதவிக்கு அது அழகல்ல. இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் ஏற்படாமல் ஆளுநர் சரி செய்ய வேண்டும். எந்த ஆட்சிக் காலத்தில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருந்தாலும் மக்கள் நலனுக்கான திட்டங்கள், சட்டங்களை அரசாங்கம் கொண்டு வருகின்ற பொழுது காலம் தாழ்த்தாமல் ஆளுநர் உடனுக்குடன் கையெழுத்திடுவது தான் மரபு.

 

ஏற்கனவே உச்சநீதிமன்றமே ஆளுநர் காலம் தாழ்த்தியதற்கும் சில விஷயங்களைக் கிடப்பில் போட்டதற்கும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் ஆளுநர் கவனமாகச் செயல்பட வேண்டும். விமர்சனத்திற்கு ஆளாகாமல் செயல்படுவதுதான் ஆளுநருக்கு அழகாக இருக்கும்.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.