Skip to main content

ஆக்ரோஷமான மனோஜ் பாண்டியன்; அமைதிப்படுத்திய கே.பி. முனுசாமி - என்ன நடந்தது சட்டமன்றத்தில்?

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

heavy controversy between ops team mla and eps team mla in assembly 

 

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அதன் பின்னர்  மசோதா மீதான விவாதம் தொடங்கியது. அனைத்துக் கட்சி சார்பிலும் ஒருவர் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார்.

 

அப்போது அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "அதிமுக சார்பாக முழுமையாக வரவேற்கிறோம்..." என்று பேசினார். ஓ.பி.எஸ். பேசியதும் இருக்கையில் இருந்து எழுந்த இ.பி.எஸ், "ஒரு கட்சிக்கு ஒருவர் வீதம் என பேச அனுமதித்ததன் பேரில் தான் அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசிவிட்டார். எங்களிடம் தான் பெரும்பான்மை இருக்கிறது. நான் தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன்" என்றார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, "முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் பேச அனுமதி கேட்டதால் அனுமதி வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து இ.பி.எஸ். ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் கோஷங்களை எழுப்பினர். அதேபோல், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏக்களும் கோஷங்களை எழுப்பினர். ஒரு கட்டத்திற்கு மேல், மனோஜ் பாண்டியன் திடீரென ஆவேசமாக சபாநாயகரை நோக்கி தங்கள் விளக்கத்தை சொன்னார். அந்த சமயம், இ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ எழுந்து மனோஜ் பாண்டியனை தாக்கும் வகையில் ஆக்ரோஷமாக கூச்சலிட்டபடி வந்தார். அவரை அங்கிருந்த இ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏக்கள் தடுத்தனர். அதேபோல், மனோஜ் பாண்டியனும் அவரை நோக்கி தாக்குகிற வகையில் ஆக்ரோஷமாக செல்ல முயன்றார்.

 

அப்போது தனது இருக்கையில் அமர்ந்திருந்த ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் கையை இழுத்து அவரை தடுத்தார். ஆனாலும், மனோஜ் பாண்டியன் மற்றும் இ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. உடனடியாக எம்.எல்.ஏ. கே.பி. முனுசாமி, இ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வை தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினார். அதிமுகவின் இரு அணி எம்.எல்.ஏக்களும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி ஆக்ரோஷமாக கோஷமிட்டதாலும், தாக்கும் வகையில் நடந்துகொண்டதாலும் சட்டமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.