Skip to main content

திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்த ஹரி நாடார்!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

Hari Nadar got third place in his constituency


நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைகிறது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கு என அக்கட்சியினர் நம்பியிருந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. 

 

இந்தத் தேர்தலில் பல இடங்களில் பல சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தேர்தல் பிரச்சாரத்தின்போதே பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார். உடம்பில் ஏறத்தாழ 10 கிலோ தங்க நகைகளை உடுத்திக்கொண்டு, பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது எல்லாம் ஹரி நாடாரை தமிழகம் முழுக்க கவனிக்க வைத்தது.

 

தேர்தல் பிரச்சாரம் மட்டுமின்றி தற்போது தேர்தல் முடிவுகளிலும் அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார். காரணம் தமிழகத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அவர்தான் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் ஆலடி அருணா மற்றும் அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அதிமுக மனோஜ் பாண்டியன், 3,539 வாக்குகள் அதிகம் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக ஆலடி அருணாவை வென்றார். 

 

இத்தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு மிகுந்த நெருக்கடி கொடுத்த ஹரி நாடார் குறிப்பாக 5 மற்றும் 6ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கைகளில் திமுக அதிமுக வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளி முன்னிலை வகித்தார். திமுக வேட்பாளரின் 5 மற்றும் 6ஆம் சுற்றின் வாக்கு நிலவரம் முறையே 1,917 மற்றும் 1,994. அதிமுக வேட்பாளரின் 5 மற்றும் 6ஆம் சுற்றின் வாக்கு நிலவரம் முறையே 2,253 மற்றும் 1,976. ஹரி நாடார் இந்தச் சுற்றுகளில் முறையே 3,049 மற்றும் 2,162. 

 

இறுதியில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகளும், திமுக வேட்பாளர் ஆலடி அருணா 70,614 வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில், 37,727 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் ஹரி நாடார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு முன் போடப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

660 road contracts canceled before elections canceled

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு இறுதிச் செய்யப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்களை ரத்துச் செய்து சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. பொறுப்பேற்றப் பின்னர், இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்தார். 

 

தற்போது அந்த குழு அளித்துள்ள ஆய்வறிக்கையில், சாலை சீரமைப்பிற்கான ஒப்பந்தங்களில் உள்ள 3,200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அதைச் சீரமைக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததால், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 

Next Story

வாக்குரிமையை உறுதி செய்ய வழக்கு தொடர்ந்த ஓட்டுநர்கள்.. வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்..! 

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

Drivers suing to confirm suffrage .. High Court closes case ..!


அடுத்த தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் எவரும் தங்கள் வாக்குரிமையை இழக்கவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்களால் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை என்றும், அவர்களது வாக்குரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டது.

 

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.