Skip to main content

“உப்புக்கும், உணவுப்பொருட்களுக்கும் ஜிஎஸ்டி..”  பா.ஜ.க. அரசை சாடிய அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

“GST on Salt and Foodstuffs..”  Minister I. Periyasamy

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக ரூ.3 கோடியே 45 இலட்சம் மதிப்பில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது. 

 

இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தேர்தலின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவுத்துறை சார்பாக அறிவித்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நம்மிடம் வாங்கிய ஜி.எஸ்.டி வரிப் பணத்தை கேட்டு பெறும் நிலைக்கு தமிழக அரசை மத்திய அரசு தள்ளி வருகிறது. 

 

அதுபோல் நீட் தேர்வை கொண்டு தமிழக மாணவ, மாணவியர்களின் மருத்துவ கனவை அழித்த பா.ஜ.க. அரசு, இப்போது தங்களது கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வை கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழக மாணவ-மாணவியர்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சின்னாளபட்டி அருகே உள்ள காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் சின்னாளபட்டியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தார்கள். க்யூட் தேர்வை கொண்டு வந்தததன் மூலம் இவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வட இந்தியாவைச் சேர்ந்த நாகலாந்து, மணிப்பூர், ஒரிசா, பீகார், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் தான் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

 

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையையும், சிபிஐயையும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு தவறாக பயன்படுத்தி வருகிறது. நீதிமன்றங்கள் இருப்பதால் தான் இந்தியாவில் இன்னும் நீதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செயல்படுத்தாத பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களின் கல்வியை பாதுகாக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் பள்ளி மாணவர்களின் நலன் காப்பதோடு அவர்கள் விரும்பும் பாடங்களும் கிடைத்து நல்லமுறையில் படித்து வரக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை அடுத்து அடுத்து விசாரிக்கும் என கூறி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு மத்தியில் ஆளும் பா.ஜ..க அரசு பழிவாங்கும் நிலையை கையில் எடுத்தால் இலங்கை நிலைமை தான் ஏற்படும். அரசியல் லாபத்திற்காக, சுயநலத்திற்காக அமலாக்கத்துறையை பயன்படுத்தக்கூடாது. மத்திய அரசு ஆணவமாகவும், அதிகாரமாகவும் செயல்பட்டால் சட்டம் அதற்கு இடம் கொடுக்காது. 

 

அ.தி.மு.க. அரசு தமிழகத்தை 10 வருடம் ஆண்டபோது 5 லட்சம் கோடி அளவிற்கு கடன் சுமையை ஏற்றி விட்டார்கள். தமிழகத்தில் இப்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளது என மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் கூப்பாடு போடுகின்றனர். உதய்மின் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதால் இன்று மத்திய அரசு சொல்லும் அனைத்து சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு குறித்து மின்துறை அமைச்சர் இலவச தொலைபேசி அழைப்பு மூலம் கருத்துக்களை சொல்லலாம் என கூறியுள்ளார். லட்சக்கணக்கான பேர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார். பத்து வருடங்களாக தமிழகத்தில் தறிகெட்டு ஓடிய அதிமுக அரசு பேருந்து பிரேக் இல்லாத வண்டியாக செயல்பட்டு வந்தது. தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். விரைவில் தமிழக மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி இந்தியாவின் சிறந்த மாநிலம் தமிழகம் என்ற நிலைக்கு உயர்த்துவார்” என்று கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.