!['' Government of Tamil Nadu should take immediate legal action '' - EPS, OBS](http://image.nakkheeran.in/cdn/farfuture/R-nWpw_mAOaqfj0snhkbq8bZTc8cwp1_Oo-_k5t_CRE/1620304036/sites/default/files/inline-images/tryutr_1.jpg)
மஹாராஷ்ட்ரா மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் மராத்தா சமூகத்தினருக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீடு, இடஒதுக்கீடு என்பது 50 சதவீதம்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மராத்தா இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை நேற்று 05.05.2021 உச்ச நீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில், மராத்தா இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், "மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக, இடஒதுக்கீடு 50 சதவீதம்தான் இருக்க வேண்டுமென்ற விதியை மீற எந்த சரியான காரணமும் இல்லை" என கூறியுள்ளது. மேலும், "மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அவர்களை சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் என அறிவிக்க முடியாது" எனவும் தெரிவித்திருந்தது.
!['' Government of Tamil Nadu should take immediate legal action '' - EPS, OBS](http://image.nakkheeran.in/cdn/farfuture/hcTI_-nEc5Q57rpm_IelIyaOgSnFLMPTDpdASNZYGK4/1620304074/sites/default/files/inline-images/r8765765.jpg)
மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்துக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ''தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்கும், சமூக நீதி பாதுகாப்புக்கும் அடிப்படையாக 69 % இடஒதுக்கீடு உள்ளது. எனவே தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க தேவையான சட்டரீதியான நடவடிக்கை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் இபிஎஸ்-ஓபிஎஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.