Skip to main content

“சசிகலா குறித்து பேசியதற்காக குடும்பத்தோடு ஒழித்துக்கட்டிவிடுவோம் என மிரட்டுகின்றனர்..” புகார் அளித்த முன்னாள் அமைச்சர் 

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

Former minister CV Shanmugam complaints police station on sasikala


விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள சி.வி. சண்முகம், கடந்த 7ஆம் தேதி மாவட்டக் கட்சி அலுவலகத்தில் மாவட்ட அளவிலான கட்சி பொறுப்பாளர்களுடன் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன்பிறகு பத்திரிகை ஊடகத்தினரிடம் அரசியல் குறித்து பரபரப்பான பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது, “கருவாடு கூட மீன் ஆகலாம், ஆனால் சசிகலா அதிமுகவில்  எப்போதும் உறுப்பினராக முடியாது. சசிகலாவுக்கும் அதிமுக கட்சிக்கும் எந்தத் தொடர்பும் சம்பந்தமும் இல்லை. கட்சியை சீர்குலைக்க தேர்தல் ஆணையத்திலும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து தள்ளுபடியானது. அப்படிப்பட்ட சசிகலா, முன்னாள் முதல்வர் எங்கள் அம்மா ஜெயலலிதாவுக்கு உதவியாளராக அவரோடு இருந்தவர். அதைத் தவிர அவருக்கு வேறு எந்த தகுதியும் இல்லை” என காரசாரமாக  பேட்டி அளித்திருந்தார்.

 

அதன் பிறகு நேற்று (09.06.2021) திடீரென திண்டிவனம் ரோசணை காவல் நிலையத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ. சக்கரபாணியுடன் வந்த சி.வி. சண்முகம், இன்ஸ்பெக்டர் வள்ளியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், “சசிகலா குறித்து கடந்த 7ஆம் தேதி பத்திரிகை ஊடகத்தினரிடத்தில் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தேன். அதன் அடிப்படையில் எனக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் கொலை மிரட்டல் விடுத்துவருகின்றனர். சசிகலாவின் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்துவருகின்றனர். சசிகலா குறித்து பேசியதற்காக ‘உன்னை குடும்பத்தோடு ஒழித்துக் கட்டிவிடுவோம்’ என்றும் ஆபாசமான அருவருப்பான வார்த்தைகளாலும் திட்டி மிரட்டல் விடுத்துவருகின்றனர். 

 

முழுக்க முழுக்க சசிகலா தூண்டுதலின் பேரில் இந்த மிரட்டல் விடுத்துவருகின்றனர். எனவே இதற்கு காரணமான சசிகலா மீதும், எனக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று சி.வி. சண்முகம் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சருக்கு சசிகலா தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழ்நாடு அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக உட்கட்சி அரசியலில் இது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.