Skip to main content

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வின் முதல் வாரம்: வாஷ் அவுட் ஆன மக்களவை

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

First week of the second session of the series; A washed out Lok Sabha

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மார்ச் 13ம் தேதி தொடங்கிய இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய நாளில் இருந்தே ஆளுங்கட்சியான பாஜகவின் எம்.பி.க்கள் ராகுல் காந்தி வெளிநாட்டிற்குச் சென்று நாடாளுமன்றப் பிரச்சனைகள் குறித்து விவாதித்து இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்துவிட்டார் என்றும், அதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டுமென்றும் முழக்கங்கள் எழுப்புவதும் அதேபோல், எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும், பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பன உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்புவதும் தொடர்ந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட, நாடாளுமன்றத்தை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிடுவதும், தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு கூடும் அவையில் மீண்டும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபடுவதும் பின்னர் மறுநாள் வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிடுவதும் மூன்று நாட்களாக தொடர்கதையாகிப் போனது.

 

இந்நிலையில் 4 ஆவது நாளாக நேற்று கூடிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நேற்றும் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை ஒத்திவைக்கப்பட்டதும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மோடி மற்றும் அதானி புகைப்படங்களுடன் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், ராகுல் காந்தி இந்தியாவிற்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை. ஆளும் பாஜக நாடாளுமன்றத்தை முழுமையாக முடக்கியுள்ளது. இரண்டாம் அமர்வு தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகளை பேச விடாமல் ஆளுங்கட்சியினர் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். 

 

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமைதியாக பேரணி சென்று அமலாக்கத்துறையிடம் மனு கொடுக்கச் சென்றோம். ஆனால், அதையும் பாஜக காவல்துறையினரை வைத்து தடுத்தது என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாஜகவை குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் அவை கூடியவுடன் மீண்டும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்களாக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதால் எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவை நான்காவது நாளாக ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்நிலையில் ஐந்தாவது நாளாக இன்றும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 5 ஆவது நாளாக முடங்கின. இன்று மக்களவை துவங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை துவங்கலாம் என அறிவித்தார். ஆனால் உடனே கடும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் வரும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை கூட்டத்தொடர் முழுவதும் எந்த ஒரு நடவடிக்கையும் இன்றி இந்த வாரம் முடிவிற்கு வந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்