Skip to main content

விவசாயிகளுக்கு எதிரான அவசர சட்டங்களை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

Farmers Struggle - villupuram - District Office of the Communist Party

 

 

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள ‘மின்சார திருத்த சட்டம் 2020’ சட்டமாக்கப்பட்டால் தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் பறிபோகும், குடியிருப்புகளுக்கு நூறு யூனிட் மின்சாரத்திற்கு வழங்கப்பட்ட சலுகை பறிக்கப்படும் என்று விவசாயிகள் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

 

மேலும் அவர்கள் கூறியதாவது, அத்தியவசிய பொருட்கள் அவசரச் சட்டம் 2020 நடைமுறைப்படுத்தப்பட்டால், 1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டம் நீர்த்துபோகும் நிலை ஏற்படும். இத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் பதுக்கி வைத்தால், பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இதனை அவசர சட்ட திருத்தம் மாற்றி அமைக்கும் வகையில் உள்ளது. அப்படி மாற்றி அமைக்கப்பட்டால் உணவுப்பொருட்களில் அரிசி, கோதுமை, எண்ணெய் வித்துகள், மற்றும் சமையல் எண்ணெய், தானியங்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு வகைகள் போன்றவை பதுக்கினால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க இயலாது. எனவே செயற்கையான விலை உயர்வுக்கு வழிவகுக்கும். மேலும் வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர திட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் வேளாண்மை சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 சட்டங்கள் எல்லாம் விவசாயிகளுக்கு எதிராக அமைந்துள்ளன.

 

எனவே மேற்கண்ட சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகள் ஒருங்கிணைந்து போராட்டத்தை துவக்கியுள்ளனர். தமிழகத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுதும்  ஒரு  கோடி மக்களிடம் கையெழுத்து பெரும் இயக்கம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 27ஆம் தேதி நாடு முழுவதும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில், கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

விழுப்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.ஐ.சகாப்புதீன், துணை தலைவர் என்.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி வட்ட செயலாளர் பி.பாலசுப்பிரமணியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, விழுப்புரம் தொகுதி செயலாளர் பெரியார், விவசாயிகள் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் காணை இராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார்.