ddd

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த 2013 ஏப்ரல் 25இல் வன்னியர் சங்கம் சார்பில், சித்திரை பவுர்ணமி விழா மற்றும் இளைஞர் விழா நடந்தது. சித்திரை திருவிழாவின்போது மரக்காணத்தில் கலவரம் ஏற்பட்டது.

Advertisment

இதையடுத்து, வன்முறையைத் தூண்டியதாகவும், பொது அமைதியை சீர்குலைக்க முயற்சித்ததாகவும் பாமகநிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, அரசகுமார், நாகராஜ் உள்ளிட்டோர் மீது, மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். இவ்வழக்கு, செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்திற்கு, ஓராண்டுக்கு முன் மாற்றப்பட்டது.

இந்தநிலையில், நேற்று (19.04.2021) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வழக்கறிஞர் ஆஜராகி, ராமதாஸ்க்கு 89 வயது ஆவதாலும், கரோனா காலம் என்பதாலும் வர முடியவில்லை என்று மருத்துவ சான்று கொடுத்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் ஆஜரானார். மற்ற ஆறு பேருக்கும் மனு அளித்தனர்.

Advertisment

இதைக்கேட்ட நீதிபதி, ராமதாஸ் மனுவை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்ற ஆறு பேரின் மனுவையும் தள்ளுபடி செய்தார். மேலும் அன்புமணி, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, கணேசன், அரசகுமார், நாகராஜ் ஆகியோருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். வரும்19ஆம் தேதி, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.